மேலும் அறிய
இரட்டைப் பச்சிளம் குழந்தைகளுக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை: தென் தமிழகத்தில் முதல்முறையாக சாதனை!
உயிருக்கு ஆபத்தான கடும் தொற்றுகளை ஏற்படுத்தும் ஒரு மரபணு குறைபாடாகும். இதற்கு சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால், 6 மாதங்களுக்குள் குழந்தை உயிரிழக்க நேரிடலாம். - எனவும் எச்சரிக்கை.

இரட்டை பச்சிளம் குழந்தை
Source : whatsapp
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள இரட்டை பச்சிளம் குழந்தைகளுக்குப் பாதியளவு பொருந்திய எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை.
தென் தமிழகத்தில் முதல்முறையாக நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதனை
தென் தமிழகத்திலேயே முதல்முறையாக, மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 7 மாதங்களே ஆன இரட்டைக் குழந்தைகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ‘டிசிஆர் ஆல்ஃபா-பீட்டா குறைக்கப்பட்ட ஹாப்லோ ஐடென்டிகல் ஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை’யை வெற்றிகரமாகச் செய்துள்ளது. இந்தக் குழந்தைகள் தொற்றுகளை எதிர்க்கும் திறனைக் கடுமையாகப் பாதிக்கும் ‘கடுமையான ஒருங்கிணைந்த நோய் எதிர்ப்புக் குறைபாடு’ (SCID) எனப்படும் அரிய வகை மரபணு நோயால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இடர்வாய்ப்பில் இருந்தனர். (TCR alpha-beta depleted haploidentical Hematopoietic Stem Cell Transplantation in seven-month-old identical twin infants diagnosed with Severe Combined Immunodeficiency (SCID). குறைபாடுள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குப் பதிலாக, ஆரோக்கியமான கொடையாளரிடமிருந்து ஸ்டெம் செல்களைப் பெற்று அதை வழங்குவதே இச்சிகிச்சையின் நோக்கமாகும். முழுமையாகப் பொருந்தக்கூடிய கொடையாளர்கள் கிடைக்காததால், பாதியளவே பொருத்தமாக இருந்த அவர்களின் தந்தையிடம் இருந்து ஸ்டெம் செல்கள் பெறப்பட்டன.
பக்கவிளைவு ஏற்படும் அபாயம் அதிகம்.
பொதுவாக, இதுபோன்ற சிகிச்சைகளில் கொடையாளரின் நோய் எதிர்ப்பு அணுக்கள் பெறுபவரின் உடல் திசுக்களைத் தாக்கும் GVHD என்ற தீவிரப் பக்கவிளைவு ஏற்படும் அபாயம் அதிகம். இந்தச் சவாலை முறியடிக்க, மருத்துவமனை 'டிசிஆர் ஆல்ஃபா-பீட்டா குறைப்பு' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. இது GVHD-ஐ ஏற்படுத்தும் அணுக்களை மட்டும் அகற்றி, நன்மை பயக்கும் பிற அணுக்களைத் தக்கவைக்கிறது. சிகிச்சைக்குப் பிறகு, ஸ்டெம் செல்கள் நன்றாகப் பொருந்தி, நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தியிருப்பதால், எவ்விதப் பெரிய சிக்கல்களுமின்றி இரு குழந்தைகளும் விரைவாகக் குணமடைந்து வருகின்றனர். இந்தச் சாதனையை, இரத்தவியல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைத் துறைத் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர். T காசி விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நிகழ்த்தியுள்ளனர். இதில் முதுநிலை மருத்துவர் டாக்டர். அன்னபூரணி RM, இணை மருத்துவ ஆலோசகர்களான டாக்டர். அனிதா V மற்றும் டாக்டர். வெங்கடேஸ்வரன் VS ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்தச் சாதனை குறித்துப் பேசிய டாக்டர். காசி விஸ்வநாதன், “இச்சாதனை உலகத்தரம் வாய்ந்த மேம்பட்ட மருத்துவச் சிகிச்சைகளை நம் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்வதில் எங்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. உயிருக்கு ஆபத்தான பிறவி நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு (Inborn Errors of Immunity - IEI) உள்ள குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இது புதிய நம்பிக்கையை அளிக்கிறது. முழுமையாகப் பொருந்திய கொடையாளர் கிடைக்காத நிலையிலும், பாதுகாப்பான 'டிசிஆர் ஆல்ஃபா-பீட்டா குறைப்பு' தொழில்நுட்பம் இத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, உயிர் காக்கும் சிகிச்சைகளை எளிதாக்கியுள்ளது” என்றார்.
நோயை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் பற்றி அவர் கூறுகையில், “அடிக்கடி ஏற்படும் கடுமையான, வழக்கத்திற்கு மாறான குணப்படுத்த சிரமமான தொற்றுகள் குழந்தைகளுக்கு இருந்தாலோ அல்லது தொற்றின் காரணமாக, உடன்பிறந்த குழந்தைகள் இறந்திருந்தாலோ, IEI எனப்படும் இப்பாதிப்பு குழந்தைக்கு இருக்கக்கூடும். காது மற்றும் சைனஸ் தொற்றுகள், தொடர்ச்சியான நிமோனியா, குறைவான வளர்ச்சி, மற்றும் பூஞ்சைத் தொற்றுகள் ஆகியவை IEI இருப்பதற்கான அறிகுறிகளாகும். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதோடு, அவர்களின் எதிர்கால நல்வாழ்வையும் கணிசமாக மேம்படுத்தும்” என்று கூறினார். இந்நிகழ்வில் மருத்துவமனையைச் சேர்ந்த திரு. திலீப் பெர்னார்ட் அவர்களும் கலந்துகொண்டார்.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















