மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த ரவுடி வெள்ளைக்காளி @ காளிமுத்து. இவரது மனைவி திவ்யா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "என் சகோதரர் சின்னமுனுசு கடந்த 2004-ல் திமுகவை சேர்ந்த வி.கே.குருசாமி ஆட்களால் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி இரு குடும்பங்களுக்கிடையே நடந்த மோதல்கள் தொடர்பாக மதுரை காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் பல வழக்குகளில் உள்ள என் கணவர் வெள்ளைக்காளியை 2016-ல் போலீஸார் கைது செய்தனர். அப்போது அவரது இடது கால் முட்டியை இரும்பு கம்பியால் அடித்து உடைத்தனர். இதன் பின் அவர் ஜாமீனில் வந்தார். 2020-ல் குற்றாலத்தில் மீண்டும் என் கணவரை கைது செய்தனர். அப்போது வலதுகால் கணுக்காலை அடித்து உடைத்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருச்சி சிறையில் என் கணவர் உள்ளார்.

 

 

அவரால் நீண்ட நேரம் நிற்கவோ, நடக்கவோ முடியாது. இருப்பினும் வழக்கு விசாரணைக்காக அவரை மதுரையைச் சுற்றியுள்ள நீதிமன்றங்களுக்கு போலீஸார் அடிக்கடி அழைத்து வருகின்றனர். என் கணவரை, ஒன்றரை வயது மகளுடன் திருச்சி சிறைக்கு நேரில் சென்றும், மதுரை நீதிமன்றங்களுக்கு அழைத்து வரும்போதும் நேரில் சென்று சந்திப்பதிலும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறேன். எனவே, வெள்ளைக்காளியை திண்டுக்கல் சிறைக்கு மாற்ற வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "வெள்ளைக்காளி மீது 8 கொலை வழக்குகளும், கஞ்சா வழக்குகளும் உள்ளன. திண்டுக்கல் சிறையில் அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் திவ்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

 



மணப்பாறை நகராட்சியின் முதல் கூட்டத்தை அதிமுக சேர்மேன் சுதா தலைமையில் நடத்த கோரிய வழக்கு - நகராட்சி ஆணையர் 4 வாரத்தில் முடிவெடுக்க உத்தரவு 

 

அ.தி.மு.க.வைச் சேர்ந்த மணப்பாறை நகராட்சித் தலைவி சுதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், போதிய கவுன்சிலர்கள் பங்கேற்காததால் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, இதுவரை நடக்கவில்லை. இதனால், நகராட்சி நிர்வாகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாக பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிக்க கூடாது என்றும், என் தலைமையில் நகராட்சியின் முதல் கூட்டத்தை அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஸ், மனுதாரரின் கோரிக்கையை நகராட்சி கமிஷனர் 4 வாரத்தில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.