ஜிஎஸ்டி மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த  அரசை பாராட்டுகிறேன் என மதுரை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.
 
ப. சிதம்பரம் மதுரையில் செய்தியாளர் சந்திப்பு
 
சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஜி.எஸ்.டி., மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன். எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் 1. 7.2007 -ல் இந்த சட்டத்தை அமல்படுத்தும்போதே இது தவறு இது போன்ற பல்வேறு வரி விகிதங்களை வைக்காதீர்கள் என்று அறிவுறுத்தினோம். தலைமை பொருளாதார ஆலோசகர் அர்ஜுன் சுப்பிரமணியம் இது தவறு என அறிவுறுத்தினார். நிதியமைச்சர்களோ மற்ற அமைச்சர்களோ சொல்வதைக் கேட்கவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளோம். 
 
மக்களை கசக்கிப் பிழிந்து மக்களின் பணத்தை எல்லாம் வரியாக வசூல் செய்தனர்
 
பல தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் தவறுகளை திருத்த வேண்டும் என சொன்னார்கள்.  இப்போதாவது இதை உணர்ந்து தவறுகளை திருத்தியதற்காக நான் நன்றி சொல்கிறேன். 8 ஆண்டுகள் நடுத்தர மக்களை, ஏழை மக்களை கசக்கிப் பிழிந்தனர். 12% -  18% இருந்ததை  5% ஆக குறைத்துள்ளதாக கூறி உள்ளார்கள். இத்தனை ஆண்டுகளாக 18 சதவீதம் அதே மக்கள் தானே தந்தார்கள். இப்போது அது பொருத்தம் என்றால் போன வருடம் இதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு  எல்லாம் பொருந்தாததா. மக்களை கசக்கிப் பிழிந்து மக்களின் பணத்தை எல்லாம் வரியாக வசூல் செய்து, இப்போதாவது மனம் திருந்தி இந்த வரி விகிதங்களை குறைத்து உள்ளார்கள் அதற்காக நான் பாராட்டுகிறேன்” என்றார்.