டோல்கேட் எதிர்ப்பு


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் பகுதியில் தேசியநெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த 2012-ம் டோல்கேட் அமைக்கப்பட்டது. இந்த கப்பலூர் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களை கட்டணமின்றி அனுமதிப்பது தொடர்பாகவும் கப்பலூர் டோல்கேட் வேறு இடத்திற்கு மாற்ற கோரியும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி முதல் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீத கட்டணம் என டோல்கேட் நிர்வாகம் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்தாம் தேதி டோல்கேட் முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவிற்கான போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் அப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது கட்டணம் இன்றி செல்வதற்கு தற்காலிகமான அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கப்பலூர் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களை கட்டணம் என்று அனுமதிப்பதில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி அனுமதிக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கப்பலூர் டோல்கேட் வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தியும்  இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் அறிவித்திருந்தனர்.


பேச்சுவார்த்தை


இந்நிலையில் இந்த குழுவினருடன் டிஎஸ்பி தலைமையிலும் கோட்டாட்சியர் தலைமையிலும் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது முடிவு எட்டப்படாத நிலையில் நேற்று மீண்டும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் மூர்த்தி தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு குழுவினர் மற்றும் சிப்காட் தொழிற்சாலை சங்கத்தினர் வணிகர்கள் சங்கத்தினர் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கப்பலூர் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களை அனுமதிப்பதில் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்த நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். அப்போது டோல்கேட் எதிர்ப்பு குழுவினர் 2020 ஆம் ஆண்டு என்ன மாதிரியான கட்டுப்பாட்டுகளுடன் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது என எந்தவித ஆவணமும் நடைமுறையும் இல்லாத நிலையில் இது போன்ற 2020 ஆம் ஆண்டு அனுமதி என்ற அறிவிப்பால் தொடர்ந்து டோல்கேட்டில் பிரச்னை உருவாகும்  என தெரிவித்தனர்.


ஒரு தரப்பு எதிர்ப்பு


மேலும் உள்ளூரில் வசிப்பதற்கான ஆதார் அட்டையின் அடிப்படையில் டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கான தனி கேட் வழியில்  வாகனங்கள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது டோல்கேட் எதிர்ப்பு குழுவினர் சிலர் நிலையான நிரந்தரமான முடிவு வேண்டும் என கூறியபோது நிரந்தர தீர்வு வேண்டுமானால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பை பெற்று வாருங்கள் என அமைச்சர் தெரிவித்தார். இதனையடுத்து 2020ஆம் ஆண்டு நடைமுறை அறிவிப்பிற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வெளியே புறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை முடிவடைந்ததாகவும் 2020 ஆம் ஆண்டு நடைமுறைப்படி உள்ளூர் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என பேச்சுவார்த்தையில் முடிவடைந்ததாக அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.


போராட்டம்


மதுரை கப்பலூர் டோல்கேட் வேறு இடத்திற்கு மாற்றுவது மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிப்பது தொடர்பாக ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தையிலும் முழுமையாக முடிவு எட்டப்படாத நிலையில் இன்று ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். அதன்படி இன்று காலை 6 மணி முதல் திருமங்கலம் நகர் மற்றும் மறவன்குளம், உச்சப்பட்டி, கப்பலூர், கூத்தியார் குண்டு, தோப்பூர் தனக்கன்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டியிலும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவாக கப்பலூர் சிட்கோ பகுதியில் இயங்கி வரும் 450 தொழில் நிறுவனங்களும் இயக்கப்படாது என கப்பலூர் சிட்கோ தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்தது. இந்த நிலையில் சுங்கச்சாவடியை போராட்டக் குழு முற்றுகையிட போவதாக அறிவித்ததை தொடர்ந்து மூன்று ஏடிஎஸ்பிக்கள் 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் 700 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டக் குழுவை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது