மதுரைக்கு வரும் முதலமைச்சர் இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தான் தற்பொழுது கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
 
கனிம வளக் கொள்ளை - கவன ஈர்ப்பு போராட்டம்
 
மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வையூரில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் பச்சைத் துண்டு அணிந்து மாபெரும் கவனயீர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இதுகுறித்து ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது...,” மதுரை மாவட்டத்தில் 10 தொகுதியில் உள்ளது. இதில் திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் வேளாண் விளைநிலங்கள் பாதிக்கப்படும் வகையில் கனிம வளக் கொள்ளை நடைபெற்று வருகிறது. வேளாண் விளை நிலங்களும், நீர் நிலைகளும், நீர் வழித்தடங்களும் பாதுகாக்க வேண்டி ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் நான் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அப்போது துறையில் அமைச்சராக இருந்த மூத்த அமைச்சர் துரைமுருகன் கனிம வளக் கொள்கை தடுத்து நிறுத்தப்படும் என்று எடுத்துச் சொன்னார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. எனவே, தற்போது ராமநாதபுரம் மாவட்டம் செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை வருகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் வலியுறுத்தி அதை நிறைவேற்ற வேண்டும் என்று தற்போது கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
 
மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்
 
எரியும் நெருப்பில் நெய் ஊற்றுவது போல தற்பொழுது வையூர் கிராமத்தில் பட்டாசு ஆலை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாண் முற்றிலும் பாதிக்கப்படும். அதேபோல கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 42 ஊராட்சியில் உள்ளது. இதில் மக்காச்சோளாம் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள், இதில் ஏறத்தாழ 11,115 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பெரும் நஷ்டத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே உடனடியாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும், அதேபோல தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கனிம வள கொள்ளை நடைபெற்று வருகிறது. இதெல்லாம் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் கடந்த 26 ம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் வழங்கப்பட்டது. ஆகவே பட்டாசு ஆலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
 
நாங்கள் மக்களுக்காக துணை நின்று போராடுவோம்
 
பட்டாசு ஆலை அமைந்தால் வேலை கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள். தற்போது இந்த இடத்தில் விளைநிலங்கள் உள்ளது. பட்டாசு ஆலை அமைப்பதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளது. பட்டாசு ஆலை வைக்கும் போது பாதுகாப்பாக கையாள வேண்டும். இல்லை என்றால் விபத்துக்கள் ஏற்படும். தற்போது இந்த பகுதியில் மானாவரி பயிர், கிணற்று பாசனம், கண்மாய் பாசனம் போன்ற பாசனம் உள்ளது என்பதை அரசு தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நாங்கள் மக்களுக்காக துணை நின்று போராடுவோம் என கூறினார்.