பிரம்மாண்டமாக நடைபெற்ற மதுரை மாநகராட்சி பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் குழந்தைகள் பாராளுமன்ற தேர்தல் - 109 வாக்குகள் பெற்று பிரதமராக பதவியேற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவித்த ஆசிரியர்கள்.
குழந்தைகள் பாராளுமன்ற தேர்தல்
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளின் தலைமைத்துவ பண்பு, குழந்தைகள் உரிமை, திறன் வளர்ப்பு, உலக குறிக்கோள், சமுதாய பங்கேற்பு போன்ற நோக்கங்களை முன்னிறுத்தி குழந்தைகள் பாராளுமன்றம் மாதிரி தேர்தல் தேர்தல் போல நடத்தப்பட்டுள்ளது. முதலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மாணவிகளின் பெயர்களுடன் வாக்குப்பதிவு எண்ணுடன் விளம்பர பலகை வைத்து பிரச்சாரம் மற்றும் வாக்குசேகரிப்பு நடைபெற்றது. இதனையடுத்து குழந்தைகள் பாராளுமன்ற மாதிரி தேர்தல் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கடந்த ஆக.25ஆம் தேதி மாநகராட்சி பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இதனையடுத்து தேர்தல் வாக்குப்பதிவு போன்றே மாணவிகளின் அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் வாக்குச்சீட்டு கொடுக்கப்பட்டது. அதன்பின் வாக்குசெலுத்தும் மாணவிகளின் கைகளில் அடையாள மை இடப்பட்ட பின்னர் வாக்குபெட்டு பாதுகாப்பாக மறைவாக வைக்கப்பட்டது. அதில் மை அச்சு மூலமாக மாணவிகள. தங்களது வாக்குகளை செலுத்தினர்.
பிரதமர், சபாநாயகர் அமைச்சர்கள் செய்ய வேண்டிய பணிகள்
இதில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான 19 மாணவிகள் வேட்பாளர்களாக மாணவிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 850 மாணவிகளில் 741 மாணவிகள் வாக்கு செலுத்தினர். இதில் 86.75 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் 19 வேட்பாளர்களான மாணவிகள் பெற்ற வாக்குகள் நேற்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை அதிகாரியாக இருந்த ஆசிரியை சகாயமேரி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களான மாணவிகள் மூலமாக காலை முதல் மதியம் வரை மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதையடுத்து இன்று காலை பள்ளி வழிபாட்டு கூட்டத்தின் போது வாக்குகளின் முன்னிலை அடிப்படையில் மாதிரி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி குழந்தைகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதோடு தேர்வாக கூடிய பிரதமர், சபாநாயகர் அமைச்சர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை முடிவு
இதனைத் தொடர்ந்து தேர்தல்நடத்தும் அதிகாரியான பள்ளி தலைமை ஆசிரியர் தனலெட்சுமி வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவித்தார். அதன்படி 9 ஆம் மாணவியான சகானா 741 வாக்குகளில் 109 வாக்குகள் பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அபிநயஸ்ரீ என்ற 9 ஆம் வகுப்பு 99 வாக்குகள் பெற்று துணை பிரதமராகவும், ரூபிகா என்ற 9 ஆம் வகுப்பு மாணவி - 81 வாக்குகள் சபாநாயகராகவும் தேர்வாகினர். இதனை தொடர்ந்து தேன்மொழி என்ற மாணவி நிதித்துறை அமைச்சராகவும், பின்னர் வாக்குகள் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை விளையாட்டுத்துறை சுற்றுச்சூழல் துறை சட்டத்துறை உள்ளிட்ட 16 துறைகளை சேர்ந்த அமைச்சர்களாக மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வாக்குகள் அடிப்படையில் பதவியேற்ற பள்ளியின் பிரதமர் துணை பிரதமர் சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுக்கு தலைமை ஆசிரியை தனலட்சுமி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து தேர்வான பிரதமர், துணை பிரதமர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுக்கு தாங்கள் பதவியை எப்படி பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதோடு, பிரதமர் துணை பிரதமர் அமைச்சர்கள் தங்களது துறை ரீதியான பணிகளை தவறாக பயன்படுத்தினாலோ, பொறுப்பற்ற முறையில் செயல்பட்டாலோ, தவறிழைத்தாலோ உடனடியாக மூன்று மாதத்திற்குள் அமைச்சரவை மாற்றம் செய்வதற்கான நடைமுறைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பதவியேற்றவர்களுக்கு வாழ்த்து
பிரதமராக தேர்வான மாணவி அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட மாணவி பள்ளியின் சுற்றுச்சூழலை பராமரிக்கும் வகையில் செயல்பட வேண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் , நிதித்துறை அமைச்சர் பள்ளியில் நிதிகளை கட்டுப்படுத்துவது, சிறப்பாக கையாளுவது, சேமிப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், சுகாதாரத்துறை அமைச்சர் பள்ளியின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தங்களது பணிகளில் இருந்து மீறி செயல்பட்டால் மாணவிகள் பொது உறுப்பினர்கள் உரிய ஆதாரங்களுடன் கூறினால் அவர்களை பணிநீக்கம் செய்வதற்கு பரிந்துரைக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதிதாக பதவி ஏற்ற பிரதமர் துணை பிரதமர் சபாநாயகர் மற்றும் அமைச்சரவை உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பின்னர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். குழந்தைகள் பாராளுமன்ற மாதிரி தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்றவர்கள் நடப்பு கல்வியாண்டு காலம்வரை இப்பதவியில் பள்ளி செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து புதிதாக தேர்வான பிரதமர் துணை பிரதமர் சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுக்கு தலைமை ஆசிரியர் தனலட்சுமி வாழ்த்து தெரிவித்து சிறப்பாக செயல்பட வேண்டும் என கூறினார்.