பாரதிய ஜனதா கட்சியின் சார்பு அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க்(RSS) தலைவர் மோகன் பகவத் நாளை மதுரை வரவிருக்கிறார். இதையொட்டி விமானநிலையம் முதல் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள் வரை சாலைகளைச் சீரமைக்கச் சொல்லி மதுரை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 


தனியொரு அமைப்பின் தலைவர் வருகை தருவதற்கு உள்ளாட்சி உத்தரவு பிறப்பிக்க  வேண்டுமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மாநகராட்சி உதவி ஆணையாளர் (பணியமைப்பு) சண்முகம் உத்தரவில், 
’மதுரை மாநகராட்சி மண்டலம் - 4 சத்யசாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் RSS தலைவரான திரு.மோகன்பகவத் அவர்கள் 22.07.2021 முதல் 26.07.2021 வரை நேரில் கலந்து கொள்ள உள்ளார்.
எனவே அன்னாரின் வருகையை முன்னிட்டு விமானநிலையத்தில் இருந்து அன்னார் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளில்


1. சாலைகளை சீரமைத்தல்,
2. தெரு விளக்குகளை பராமரித்தல், 
3. சாலைகளை சுத்தமாக வைத்தல், போன்ற பணிகளை செய்திடவும்
4. அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சிப் பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபொறாமல் இருப்பதை கண்காணித்தல். போன்ற பணிகளை கவனித்து வர அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது’ 


எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயனிடம் ABP நாடு சார்பில் கேட்டோம். அவர்,’அரசால் Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்ட நபர்களுக்கு வழக்கமான பாதுகாப்பு எப்போதும் மாநகராட்சியால் தரப்படுவதுதான். அதன் அடிப்படையிலேயே தற்போது மோகன் பகவத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.மற்றபடி அவருக்காக என்று சிறப்பு நடவடிக்கைகள் எதுவும் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படவில்லை’ என மறுத்துள்ளார். 


மேலும் அவர், ‘உதவி ஆணையாளர் அனுப்பிய சுற்றறிக்கை (Circular) யாரிடமும் அனுமதி கேட்காமல் அனுப்பிவிட்டார். அந்த சுற்றறிக்கைத் தேவையற்றதுதான்’ எனக் கூறினார்.  


இந்நிலையில் மாநகராட்சியின் இந்த சுற்றறிக்கை குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 


இந்த உத்தரவு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது டிவிட்டர் பதிவில், 'அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்’ எனக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். 






விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பதிவில்,’RSS தலைவருக்கு வரவேற்பு மதுரையில் அரசு செலவில். மதுரைக்கு வந்த சோதனை. நடவடிக்கை தேவை மதவாதிக்கு உதவும் அதிகாரிகள் மீது. செய்வாரா அண்ணன் ⁦கே.என்.நேரு’ 






எனக் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாகப் பலர் இந்த அறிக்கைக்கு எதிராக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.