கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடம் நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணி புரிந்த பெண் காவல் ஆய்வாளர் வசந்தி என்பவர் 5 கூட்டாளிகளுடன் சேர்ந்து ரூ 10 லட்சம் பணம் பறித்ததாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனிடையே முன்னாள் ஆய்வாளர் வசந்தி நிபந்தனை ஜாமினில் வெளியில் உள்ளார்.






இந்த நிலையில் முன்னாள் ஆய்வாளர் வசந்தி வழக்கில் தொடர்புடையை ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சாட்சி ஒருவரை மிரட்டியதாக புகார் எழுந்தது.  இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் வசந்தி கடந்த மாதம் 31ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே வந்த போது அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.



 

இந்நிலையில் ஜாமினில் வெளியில் உள்ள நிலையில் வழக்கின் சாட்சியை மிரட்டி தொடர்ந்து சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் முன்னாள் பெண் காவல் ஆய்வாளர் வசந்தியை பணிநீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி பொன்னி உத்தரவிட்டுள்ளார். வழிப்பறி வழக்கில் முன்னாள் பெண் காவல் ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.