ஸ்டெர்லைட் ஆலையின் துணைத்தலைவர் சுமதி உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "இந்தியாவில் 2வது கொரோனா அலையின் போது ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதியானது ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் புதியம்புதூர், சிப்காட்டை சேர்ந்த சிலர் 3வது கொரோனா அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க வேண்டியும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட வலியுறுத்தியும் ஜூலை 27-ஆம் தேதி ஆலை முன்பாக ஊழியர்கள் பலர் கூடியுள்ளனர்.

 



 

ஆலை முன்பு கூடியவர்கள் மீது சிப்காட் மற்றும் புதியம் புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக்கூடாது எனும் நோக்கிலேயே கூடினர். ஆகவே, இந்த வழக்கை விசாரணை செய்ய இடைக்கால தடை விதிக்கவும், இந்த வழக்கை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். அதோடு, மதுரைக்கிளையில் வழக்கை ரத்து செய்யுமாறு மனுத்தாக்கல் செய்தவர்களுக்கு மட்டுமின்றி, வழக்கு பதியப்பட்ட அனைத்து பணியாளர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.