மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், ஆவணங்களை தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு மாற்ற தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள தொல்லியல்துறை கல்வெட்டியல் கிளையை, தமிழ் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


மணிமாறன் என்பவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது, சென்னையில் உள்ள தொல்லியல்துறை கல்வெட்டியல் கிளையை, தமிழ் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தமிழ் தொடர்பான அனைத்து ஆவணங்கள், தமிழ் கல்வெட்டுகள் போன்ற அனைத்தையும் மைசூரிலிருந்து சென்னை தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு 6 மாதத்திற்குள் மாற்ற வேண்டும். தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டியல் பிரிவு  உள்ளிட்ட பிரிவுகளில் போதுமான அளவு நிபுணர்களை பணியமர்த்த வேண்டும். சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டியல் பிரிவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 6 மாதத்திற்குள்ளாக செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.




முன்னதாக, இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலும் கல்வெட்டுக்கள், பனை ஓலை குறிப்புகள், அகழாய்வுப் பொருட்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கப்பெறுகின்றன. பழம் வரலாற்றிற்கு ஆதாரமாக பெரும்பாலான தகவல்கள் கல்வெட்டுக்களில் இருந்து கிடைக்கப் பெற்றதால், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு அரசு 1961ஆம் ஆண்டு தொல்லியல் துறையை, கல்வெட்டியல் துறையை ஏற்படுத்தியது. இதன் முக்கிய பணி தமிழ்நாட்டின் பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது, அகழாய்வு செய்து பழம்பெருமைக்கு ஆதாரமாகத் திகழும் பொருட்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பது, பழமைக்கு ஆதாரமான கலை, சிற்பம் போன்றவற்றை பாதுகாப்பது, அவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பதிப்பித்து வெளியிடுவது ஆகியவையே. பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழோடு தொடர்புடையவை. ஆனால் அவை இன்றுவரை பதிப்பித்து வெளியிடப்படவில்லை. இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு மைசூர் கல்வெட்டியல் அலுவலகம் பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் கல்வெட்டு தொடர்பான ஆவணங்கள் அதில் சிதைவடைந்திருந்தால் தமிழர்களின் பாரம்பரியம், பழமையான வரலாறு தொடர்பான ஆவணங்களை இழந்தவர்களாவோம்.  ஆகவே மைசூரில் உள்ள கல்வெட்டியல் துறையில் உள்ள தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுக்களை தமிழக தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் கல்வெட்டியல் துறையிடம் ஒப்படைக்கவும், அவற்றை அரசியலமைப்புச் சட்டப்படி,  பாதுகாக்க, நவீன தொழிநுட்ப முறையில் பாதுகாக்க தேவையான நிதி ஒதுக்கி உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்’என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.