இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பதால்தான் பருவம் தவறிய மழை தமிழகத்தில் பொழிகிறது என மதுரை ஆதீனம் பேட்டியளித்தார்.

 

மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு ஆதீனம் மரியாதை

 

சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் சிலைகளுக்கு, மதுரை 293-வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சாமிகள் தொடர்ந்த மரியாதை செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு 225 -வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் வீரபாண்டிய கட்ட பொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய முக்கியஸ்தர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

 


 

ஆதீனம் செய்தியாளர் சந்திப்பு

 

பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: இன்றைய தலைமுறைகள் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். தொடர்ந்து இளைஞர்களுக்கு அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆண்டுதோறும்  மதுரை ஆதீனம் சார்பாக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன். அவர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை. தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழைக்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம். கோயில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை செலுத்துவதில்லை என்று கூறினார்.  தொடர்ந்து நடிகர் விஜய் குறித்தான கேள்வியை செய்தியாளர் எழுப்பிய உடனே இடத்தை விட்டு நகர்ந்து சென்றார் மதுரை ஆதீனம்.