சாலையில் கிடந்த ரூ. 17 லட்சம் பணம்; நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிவ பக்தர் - மதுரையில் நெகிழ்ச்சி
சாக்கு மூட்டையில் கிடந்த பணம் ஹாவாலா பணமா? வேறு யாரும் வியாபாரிகள் கொண்டுவந்த பணமா என விளக்குத்தூண் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் சாக்கு மூட்டையில் சாலையின் நடுவே கிடந்த கட்டுக்கட்டான 17 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்.
சாக்கு மூட்டையில் 500 ரூபாய் பணக்கட்டு
மதுரை மாநகர் சிம்மக்கல் பகுதியை சேர்ந்த சிவ பக்தரானவர் செல்வ மாலினி. இவர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு பல்வேறு ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல, நேற்றிரவு கோயிலில் இருந்து செல்வமாலினி வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது மதுரை வக்கில் புதுத்தெரு சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. இதனை ஓரமாக தள்ளி விடுவதற்காக தனது காலால் எட்டி உதைத்த போது சாக்கு மூட்டையில் 500 ரூபாய் பணக்கட்டு இருப்பது போல தெரிந்துள்ளது. இதனை பார்த்து பதற்றமடைந்த செல்வமாலினி அருகில் பாதுகாப்பு பணியில் இருந்து காவல்துறை வாகனத்தில் இருந்த காவலரை அழைத்து கூறியுள்ளார்.
ஹவாலா பணமா? என காவல்துறையினர் விசாரணை
பின்னர் சாக்குமூட்டையை பிரித்துப் பார்த்த போது, 500 ரூபாய் பணம், 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டுகட்டாக இருந்துள்ளது. பின்னர் செல்வமாலினி அந்த சாக்கு மூட்டையை விளக்குத்தூண் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்துள்ளார். அப்போது செல்வராணியின் நேர்மையை பார்த்து காவல்துறையினர் அப்பெண்ணுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து சாக்கு மூட்டையில் கிடந்த பணம் யாருடையது என்பது குறித்தான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சாக்கு மூட்டையில் கிடந்த பணம் ஹாவாலா பணமா? வேறு யாரும் வியாபாரிகள் கொண்டுவந்த பணமா என விளக்குத்தூண் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















