குச்சனூர் சனிப்பெயர்ச்சி: சனி தோஷம் நீங்க வேண்டுமா? சுயம்பு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீனம் ராசிக்கு இடம்பெயரும் சனி பெயர்ச்சி விழாவானது உத்தமபாளையம் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் நடைபெற்றது.
தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நவக்கிரகங்களில் பொதுவாக சனி பகவான் என்றாலே ஒருவரை தண்டிக்கும் சனி பீடை என்றே நம்பப்படுகிறது. ஒருவருக்கு சனி பிடித்தால் பாடாய்படுத்துவார் என்றும் பல்வேறு சிரமங்களை கொடுப்பார் என்றும் நம்பப்படுகிறது.
ஆனால் இங்கு கூறப்படுவதாவது, சனி பகவான் நல்ல யோகத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும்போது அவர் பல்வேறு வெற்றிகளை அடைவார் என்றும், நல்ல நிலைக்கு செல்வார் என்றும் நம்பப்படுகிறது. சனிபகவான் அனைவரையும் தண்டிக்கவில்லை என்றும் சனி திசை அல்லது ஏழரை சனியின் காலத்தில் படும் கஷ்டமானது அவரது முன் வினை கர்மாவின் அடிப்படையே கொண்டே அமைகிறது என்று கூறப்படுகிறது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் பிரசித்திபெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. தமிழகத்தில் தனிப்பெரும் கோவிலில் சனீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஒரே இடமாக குச்சனூர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஆடி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தங்களது தோஷங்கள் நீங்க நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று சனிப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு நேற்று லட்ச்சார்ச்சன பரிகார ஹோமம் மற்றும் மகா சாந்தி ஹோமம் நிறைவடைந்த நிலையில், இன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீனம் ராசிக்கு இடம்பெயரும் சனி பெயர்ச்சி தினத்தை சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் நடைபெற்றது. இன்று அதிகாலை முதலே தொடங்கிய இந்த விழாவில் இலட்சார்சனை பூஜை சனிப் பிரிதிகோமம் மற்றும்பால், இளநீர்,பன்னீர், விபூதி, பழம், வெற்றிலை, பாக்கு கொண்டு சனிக்கிரக சாந்தி விசேஷ அபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சனி பகவானுக்கு நடைபெற்ற பூஜைகளை கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே தற்காலிக நிழற்குடைகள் அமைத்தும் தடுப்பு வேலிகள் அமைத்தும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















