இந்தியாவிலேயே மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'காடுகளின் பரிசு' என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம். கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது.
கொடைக்கானலுக்கு ஏப்ரல், மே மாதங்களில் சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்த ஆண்டு தற்போதே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் கொடைக்கானலுக்கு வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் இங்கு இயற்கை எழில் காட்சிகளை பார்த்து ரசித்தாலும் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வர். கொடைக்கானல் மேல் மலை கிராமமான மன்னவனூர் சுற்றுச்சூழல் மையம், ஆட்டுப்பண்ணை ஆராய்ச்சி மையம், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில், இயற்கை எழில் காட்சி பகுதிகள், கூக்கால் ஏரி, அப்பர் லேக் வியூ, பசுமை பள்ளத்தாக்கு, பாம்பார் அருவி, பூம்பாறை செல்லும் சாலையான பழனி எழில் காட்சி, கைகாட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக கொடைக்கானலை சுற்றியுள்ள தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி போன்ற சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. இதன்பின்பு இன்று முதல் மூடப்பட்டிருந்த சுற்றுலாத்தலங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
