தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "பழனி, பெரியகுளத்தின் சில பகுதிகள் மற்றும் கொடைக்கானல் வனப்பகுதி ஆகியவற்றை  வனவிலங்கு சரணாலயமாக  அறிவித்து, அரசு அரசாணையை வெளியிட்டது. கொடைக்கானல் வன விலங்கு சரணாலயம் 608 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பல வகையான புல்வகைகள், தூய்மையான நீர் நிலைகள் என சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான சூழல் உள்ளது. 

 

இந்நிலையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மார்ச் 2 ஆம் தேதி ஆய்வு செய்து வட்டக்கானல் பகுதி வழியாக டால்பின் நோஸ் சுற்றுலாத்தலத்தை அடைய வனப்பகுதி வழியாக  சாலை அமைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள வன உயிரினங்கள் பாதிக்கப்படும். இப்பகுதியில் சாலை அமைக்க முறையான அனுமதி பெறப்படவேண்டும். ஆனால் அது போல எவ்விதமான அனுமதியும் பெறப்படவில்லை.  ஆகவே கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலாதலத்திற்கு வட்டக்கானலிலிருந்து வனப்பகுதி வழியாக சாலை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில்,"வனம் வழியாக எந்த புதிய சாலையும் அமைக்கப்படவில்லை. நீண்ட ஆண்டுகளாக தார்சாலை வசதி இல்லாத வெள்ளகவி கிராமத்தின் மண் சாலையை தார்சாலையாக மாற்றும் பணியே நடக்கிறது" என தெரிவிக்கப்பட்டது.அதனை பதில்மனுவாக தாக்கல் செய்ய கால அவகாசமும் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கை ஏப்ரல் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 



 

வருமானத்திற்கு அதிமான சொத்து சேர்த்ததாக பட்டுக்கோட்டை பதிவாளர் அலுவலக உதவியாளர் சந்திரசேகரன் மீதான புகார் - தாமாக முன்வந்து விசாரித்த வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

 


பட்டுக்கோட்டை பதிவாளர் அலுவலக உதவியாளர் சந்திரசேகரன் , தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியத்திற்கு ஒரு கடிதம் வந்துள்ளது.அதனஅடிப்படையில், இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரிப்பதாகக் கூறி விசாரித்த தனிநீதிபதி வழக்கு குறித்து பதிவுத்துறை செயலர், தஞ்சை ஆட்சியர், பதிவுத்துறை ஐஜி, லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் சந்திரசேகரன் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.


இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வில்  விசாரணைக்கு வந்தது.அரசுத் தரப்பில், சந்திரசேகரன் மீது ஏற்கனவே வந்த புகார்களின் அடிப்படையில், நீதிமன்ற நடவடிக்கைக்கு முன்பாகவே இரண்டு குற்றச்சாட்டு குறிப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளன. சந்திரசேகர் மீது புகார் அனுப்பிய மதுரையைச் சேர்ந்த முன்னாள் பதிவாளர் பாக்கியம் சிக்கந்தர் என்பவர் மீதான புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து நீதிபதிகள், ‘இது தொடர்பான புகார்கள் கடிதமாக வந்தால், நிர்வாக நீதிபதி மூலம் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகே விசாரணை நடத்த வேண்டும். ஆனால், பணியாளர் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்போது, பொதுநல மனுவைப் போல உத்தரவிட முடியாது. எனவே, கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரித்த  மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.