திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் புகையிலைப் பெட்டியில் கம்ப்யூட்டர் பிஜிடிசிஏ படித்துவிட்டு பெற்றோருடன் விவசாயம் பார்க்கும் இளம்பெண் ஜெயமணி. இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்காக 4 காளைகளை தயார்படுத்தி வருகிறார். உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழா நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இந்த போட்டிக்கு காளைகளை, அதன் உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகிறார்கள். பொதுவாக ஜல்லிக்கட்டு ஆண்களுக்கான விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது.




காளைகளை அடக்கும் காளையர்களின் வீரத்தையும், அவர்களை புறமுதுகு காட்டி ஓட வைக்கும் காளைகளை வளர்க்கும் உரிமையாளர்கள் பெருமைகளைச் சொல்லும் விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. அதுபோல், இந்த விளையாட்டை பார்க்க வரும் பார்வையாளர்களும், பெரும்பாலும் ஆண்களாகவே உள்ளனர். அதை மாற்றிக்காட்டும் விதமாக இளம்பெண் ஜெயமணி இந்த ஆண்டு நடக்க உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு 4 காளைகளைத் தயார் செய்து வருகிறார். அதில், 2 காங்கேயம் மாடுகள், ஒரு தேனி மலைமாடு, ஒரு புளிக்குளம் மாடு உள்ளது.தான் வளர்க்கும் ஒவ்வொரு காளைக்கும் செல்லப் பெயர் வைத்து, நண்பர்களைப் போல் வளர்ப்பதில் ஜெயமணிக்கு நிகர் யாரும் இல்லை. இவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் அந்த காளைகளே இவரது வளர்ப்பிற்கு சான்று. ஜெயமணி வீட்டில் உள்ள காளைகளைப் பராமரிப்பது, பெற்றோருடன் சேரந்ந்து விவசாயப்பணிகள் செய்வதுமாக ஒவ்வொரு நாளையும் பரபரப்பாகக் கடக்கிறார்.ஊருக்கு வெளியில் புல் வெளியில் ஜெயமணி, அவரது ஜல்லிக்கட்டு காளை கருப்பனை மேய விட்டுக் கொண்டிருந்தார்.


Kaanum Pongal 2024:12 ராசிக்காரர்களே! காணும் பொங்கலன்று நீங்கள் யார் காலில் விழ வேண்டும்?


அவரிடம், ஜல்லிக்கட்டுக்கு ஆர்வம் எவ்வாறு வந்தது என்று கேட்டோம். அதற்கு அவர் ‘‘சிறுவயதிலிருந்தே என்னோட வீட்டைச் சுற்றி காளைகள்தான் இருக்கும்.12 வயதிலேயே ஜல்லிக்கட்டு பார்க்கும் ஆர்வம் எனக்கு வந்தது.படித்த நேரம் போக, மற்ற நேரங்களில் காளைகளோடுதான் நான் அதிகம் விளையாடுவேன். நாங்க வளர்க்கும் காளைகள் அனைத்தும் நான் சொல்லும் வார்த்தைக்குக் கட்டுப்படும். அந்தளவுக்கு பழக்கப்படுத்தி வைத்திருப்பேன்.அப்படியிருக்கும்போது நாமும் ஏன், ஜல்லிக்கட்டுக்கு காளையை தயார் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக நான் வளர்க்கும் 4 காளைகளை தயார்ப்படுத்தி வருகிறேன். வீட்டிற்கு வந்தவுடன் நெல்லிக்காய், கடலை மிட்டாய், பருத்திக் கொட்டை உள்ளிட்ட ஊட்ட உணவுகள் வழங்குவது, குளிக்க வைப்பது எல்லாம் என்னுடைய வேலைதான். ஜல்லிக்கட்டில் பரிசு பெறுவதற்காக வளர்க்கவில்லை. அந்த போட்டியில் நான் வளர்த்த காளை பங்கேற்பதே ஒரு பெருமைதான்.ஆனாலும் கோவை, திருப்பூர்,திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டில் தங்க மோதிரம்,தங்க காயின், குத்துவிளக்கு, பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை காளைகள் எனக்கு பெற்று கொடுத்துள்ளது.ஜல்லிக்கட்டு ஆண்களுக்கான விளையாட்டு என்று மட்டும் சொல்லிட முடியாது. பெரும்பாலும் கிராமங்களில் காளைகளைப் பராமரிப்பதே பெண்கள்தான்.




அந்த பெண்கள் வளர்க்கும் காளைகள்தான், ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. ஆனால், இந்த விஷயம் வெளியே தெரியாது. அந்த காளைகளை ஜல்லிக்கட்டிற்கு அழைத்து செல்லும் ஆண்களுக்கு அந்த பெருமையெல்லாம் சென்றுவிடுகிறது. ஆகையால் நானே ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளே நானே அழைத்துச் செல்கிறேன். ஜெயமணியின் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘காளைகளை வாங்கி வீட்டில் கொண்டு வந்து விடுவதுதான் எங்கள் வேலை. அதனை உரிய முறையில் பராமரித்து, பாதுகாப்பது ஜெயமணி தான். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதால் எங்களுக்கு எவ்வித வருமானமும் கிடையாது. நமது பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு காக்கப்பட வேண்டும் என்பதற்காக வளர்க்கிறோம், ’’ என்றார்