கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோவை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைய சுகாதாரத்துறையினரால் தனி கவனம் செலுத்தப்பட்டு வந்தது. அதே போல் தேனி மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று குறைவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.




பல்வேறு கட்டங்களுக்கு பிறகு கொரோனா வைரஸ்சின் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இன்னிலையில் கடந்த இரண்டு மாதங்களாகவே தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்ற மாதம் மாத ஆரம்பத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஓரிலக்க எண்ணாக இருந்தது மாத கடைசியில் இரண்டு இலக்க எண்ணாக மாறியது. மீண்டும் தற்போது பாதிப்பு எண்ணிக்கை இந்த மாதம் 1 மற்றும் 2 ஆம் தேதி முதல் பாதிப்பு எண்ணிக்கை ஓர் இலக்க எண்ணாக மாறியுள்ளது.  




கொரோனா வைரஸ்சிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவது குறித்தும் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வுகள் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொது மக்களின் வசதிக்காக மாவட்டங்களில் பல்வேறு நகராட்சிகள், ஊராட்சி மன்றங்கள், பேருராட்சி அலுவலகங்கள் மூலமாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும்  இதுவரை மாவட்டந்தோறும் 4 கட்டங்களாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.  இதில் நேற்று தேனியில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் என 222 இடங்களில் நடந்த முகாம்களில் மக்கள் ஆர்வத்தோடு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 




இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம்  ஒரே நாளில் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 307 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 18 ஆயிரத்து 28 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 15 ஆயிரத்து 279 பேரும் செலுத்திக் கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 155 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 5 லட்சத்து 90 ஆயிரத்து 330 பேரும், 2 தவணை தடுப்பூசியை 2 லட்சத்து 20 ஆயிரத்து 825 பேரும் செலுத்திக் கொண்டனர்.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற 


https://bit.ly/2TMX27X