மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் திருமதி சர்மிளா ஜி மோகன்.  அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் கடந்த 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்றார். 






வெற்றிக்குப் பின் கடந்த சில மாதங்கள் முன் தி.மு.க.,வில் இணைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்ற சில நாட்களில் அரசு ஊராட்சிக்கு வழங்கும் நிதியை முறைகேடாக தனது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றி முறைகேடு செய்துள்ளதாக கூறி அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கருப்பசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.



இதனையடுத்து புகார் தொடர்பாக ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவரான சர்மிளா ஜியிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர் உரிய விளக்கமளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்தபடியாக வாடிப்பட்டி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கிராம நிதி பதிவேட்டை தணிக்கை செய்தனர். இதில் முறைகேடு உறுதியானது சுமார் 10 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்தது உறுதியானது. எனவே 1994 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 205ன் கீழ்முறைகேடு உறுதியானதால் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து சர்மிளா ஜி மோகன் என்பவரை பதவிநீக்கம் செய்ய ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.



அதற்குப்பின் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது ஊராட்சி மன்ற தலைவர் பணிகளை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் கவனிப்பார் என்று கூறப்படுகிறது.