ஊட்டி குன்னூர் பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் யானைகள் சாலையை கடக்க மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. அது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவியது.  இது தொடர்பாக மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்ரமணியன், சதீஷ்குமார் அமர்வு, தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிப்பதாக குறிப்பிட்டு, யானைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பாக இந்த வழக்கை, மார்ச் 25ஆம் தேதி பட்டியலிடவும், இதுதொடர்பான நிலை அறிக்கையை தமிழக அரசு தரப்பில் அன்றையதினம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

 



 

பணப்பலன்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தொழில்நுட்ப கல்வி ஆணையரின் ஒப்புதலுக்கு பிறகே அமலாவதை உறுதிபடுத்த வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரை கிளை

 

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றுவோர் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில்,"ஊதியக்குழு பரிந்துரைப்படி நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் மற்றும் சம்பள பாக்கி எங்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் எங்களுக்கு கூடுதலாக பணம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை பிடித்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.அரசு தரப்பில், "பணி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தகுதி மற்றும் சம்பளம் உள்ளிட்டவை மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான இடங்களில், முன் தேதியிட்டு பணப்பலன்கள் பெற்றுள்ளனர். இதை சரிசெய்வதற்காக மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு முன் பலர் ஆஜராகி தங்களது தகுதி உள்ளிட்டவற்றை தெரிவித்துள்ளனர். இதில், தகுதியானவர்களுக்கு பிடித்தம் செய்யப் படாது. அவர்கள் தொடர்ந்து பணப்பலன்கள் பெறலாம். ஆனால், பலர் அந்தக் குழு முன் ஆஜராகவில்லை. இதனால், அவர்களது தகுதி குறித்து முடிவெடுக்க முடியவில்லை"எனத் தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து நீதிபதி,"யூஜிசி மற்றும் ஏஐசிடிஇ பரிந்துரை அடிப்படையில் தான் பணி மேம்பாட்டுத் திட்டம் அமலாகியுள்ளது. இதன் கீழ் பணி மற்றும் பதவி உயர்வுக்கான தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஒவ்வொருவரின் தகுதியையும் இந்த நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. ஒருதரப்பினருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், மதிப்பீட்டுக் குழு முன் மார்ச் 21 முதல் மார்ச் 23க்குள் ஆஜராக வேண்டும். இந்தக்குழு முடிவெடுக்கும் வரை இவர்களுக்குரிய பணப்பலன்களை பிடித்தம் செய்யக் கூடாது.  ஏற்கனவே ஆஜரானவர்கள் தங்களது குறைகளை சரிசெய்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். குழுவின் முடிவை எதிர்த்து உரிய மேல்முறையீடு செய்யலாம். அதை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும். பணப்பலன்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தொழில்நுட்ப கல்வி ஆணையரின் ஒப்புதலுக்கு பிறகே அமலாவதை உறுதிபடுத்த வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.