தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி மதுரை திருமங்கலம் தொகுதியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். டி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய  அணை கட்ட வேண்டும். திருமங்கலம் நகர்ப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் திருமங்கலம் தொகுதியின் எம்.எல்.ஏ வும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். 


 





 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை ஆர்.பி.உதயகுமார் சந்தித்து பேசும்போது  "செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த தி.மு.க., தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை. எய்ம்ஸ் பணிகள் கிடப்பில் போட்டக் கல்லாக உள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற தமிழக அரசு மத்திய அரசுக்கு பட்டில்யிட பரிந்துரை செய்ய வேண்டும்.

 



 

அ.தி.மு.க., ஆட்சியில் முதியோர் உதவித்தொகைத் திட்டத்தில் 37 லட்சம்  முதியோருக்கு 4300 கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டு முறையாக வழங்கப்பட்டது.  முதியோர் உதவி தொகையை 1500 ரூபாயாக  உயர்த்தி வழங்குவதாக தேர்தல் நேரத்தில் அறிவித்த தி.மு.க தற்பொழுது முதியோர் உதவித்தொகையை ரத்துச் செய்து வருவது வேதனை அளிக்கிறது. மதுரை வளர்ச்சிக்காக திமுக அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை, முதல்வர் மதுரை மக்களை உண்மையாக நேசிப்பவராக இருந்தால் வரும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் மதுரைக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும்.



முதல்வர் விழா நாயகனாக உள்ளார். ஆனால், விழாவில் பங்கேற்கும் பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை. மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்தினை ஆய்வு செய்ய பல முறை வருகை புரிந்த முதல்வர் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை ஒரு முறை கூட பார்வையிடவில்லை. தமிழகத்தில் வலம் வரும் முதல்வரால் சாமானிய மக்களின் வாழ்வை வளப்படுத்த இயலவில்லை என்பது நிதர்சனம். முதல்வர் ஏளனம் செய்வது எடப்பாடி பழனிசாமியை அல்ல,  அதிமுகவிற்கு வாக்களித்த மக்களை ஏளனம் செய்வது போல் உள்ளது. முதல்வர் எதிர்கட்சியையும்  எதிர் கட்சி தலைவரையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும், எதிர்கட்சியை மதிக்காதவர் எப்படி மக்களை மதிப்பார்" என தெரிவித்தார்.



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர