கேரளாவின் கொல்லம் நகரில் 79 வயது முதியவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக கூறி ஒரு கும்பல் ரூ.3.72 கோடி மோசடி செய்துள்ளது.
இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி வியக்க வைக்கும் வகையில் உள்ளது. பல்வேறு முன்னேற்றங்களுக்கு இந்த தொழில்நுட்பங்கள் பயன்படுகிறது. அதே நேரம் சில சமூக விரோதிகள் தொழில்நுட்பங்களை வைத்து பிறரிடம் பணம் பறிக்கவும் பயன்படுத்துகின்றனர். சில பங்கு வர்த்தகம், தங்க முதலீடு, பிரதமர் இலவச திட்டம் என பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இதனை நம்பி பணத்தை சிலர் இழக்கின்றனர். ஒரு சிலரிடம் வெளிமாநிலத்தில் இருந்து போலீசார் பேசுவது போல் பேசி 'டிஜிட்டல் அரஸ்ட்' செய்துள்ளதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர். மாவட்டத்தில் இவ்வகையான இணைய மோசடிகளில் ஏமாறும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவ்வகையான மோசடிகளில் பட்டதாரிகள் இரையாகுவது தான் சோகமானது. மோசடி செய்யும் நபர்கள் மஹாராஷ்டிரா, பீஹார், டில்லி உள்ளிட்ட மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து இச்செயல்களில் ஈடுபடுவதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
கேரளாவின் கொல்லம் நகரை சேர்ந்த 79 வயது முதியவர் ஒருவருக்கு கடந்த ஜூலை 7-ம் தேதி வாட்ஸ்ஆப் வீடியோ அழைப்பில் வந்த ஒருவர் தன்னை பிஎஸ்என்எல் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். முதியவரின் செல்போன் எண் சட்டவிரோத செயல்களில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸ் சீருடையில் வந்த மற்றொருவர் முதியவரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் அது குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். மேலும் முதியவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக கூறி ஒரு போலி உத்தரவை காட்டியுள்ளார். இதில் விசாரணை அதிகாரியிடம் வாட்ஸ்ஆப் அழைப்பில் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் முதியவருக்கு போலியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பிறகு முதியவரை மிரட்டி ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 29 வரை அந்த கும்பல் ரூ.3.72 கோடி மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக முதியவர் அளித்த புகாரின் பேரில் கொல்லம் சைபர் கிரைம் போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.