பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: தைப்பூசத்திற்குப் பின்னும் தொடரும் கூட்டம்! குறவர் இனத்தவரின் சீர்வரிசை!
குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும்- முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும் . இந்த கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் அதிகமானோர் வருவதுண்டு. தமிழகத்தில் அதிகமான வருவாய் தரக்கூடிய ஒரே கோயில் பழனி முருகன் கோயில். இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் உண்டு என்பதால் இங்கு வந்து வழிபட்டு செல்வோர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். அப்படி நேர்த்திக்கடன் செலுத்த வருவோர்கள் கிரிவலப்பாதையில் உருண்டு கொடுத்தல், மொட்டை அடித்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்து வருகின்றனர்.

மேலும் முருக பெருமானிற்கு உகந்த நாட்களான சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி, மற்றும் வைகாசி விசாகம், சஷ்டி விரதம், தைப்பூசம், உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த வருட தைப்பூச திருவிழா கடந்த மாதம் தை 12 ( 26.01.26) கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 31.01.26 ஆம் தேதி திருக்கல்யாணமும், 1.2.26 தை 18ம் தேதி தேரோட்டமும் நடைபெற்று முடிந்தது. தைப்பூசத்திருவிழா முடிவடைந்த பிறகும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதன்படி இன்றும் பழனி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விடுமுறை காரணமாக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து விளாபூஜை, சிறுகாலசந்தி பூஜை நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பொதுதரிசனம், சிறப்பு, கட்டணம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படும் ரோப்கார் சேவை , மின் இழுவை ரயிலில் பக்தர்கள் சுமார் மூன்று மணி நேரம் வரையிலும் தரிசனத்திற்கு 5மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல படிப்பாதை ,யானை பாதை வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது, பக்தர்கள் வருகை காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், குறிப்பாக தமிழகத்திலிருந்து குறவர் இன மக்கள் மற்றும் வனவேங்கைகள் கட்சியினர் சீர்வரிசை பொருட்களுடன் பழனி முருகன் கோயிலுக்கு இன்று வந்து சாமி தரிசனம் செய்தனர். பழனியில் தைப்பூசத் திருவிழா விமர்சையாக நடைபெற்று முடிந்தது. தைப்பூசத் திருவிழாவின் போது முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும்- முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள குறவர் இனமக்கள் அனைவரும் இணைந்து பழனி முருகனுக்கு சீர் கொண்டுசென்றனர். இதில் தேன், திணைமாவு,மா,பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்குகள், வில்-அம்பு, ஆகியவை சீர்வரிசையில் வைத்து பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று முருகனுக்கும் வள்ளிக்கும் சீதனமாக வழங்கினர் . மேளதாளம் முழங்க ஆடிப்பாடி வள்ளிக்கு சீர்வரிசை பொருட்களை கொண்டு சென்று பழனி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து முருகனை வழிபாடு செய்தனர்.























