மதுரை  மேலூரை அடுத்த சேக்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா.  இவருக்கு  மனநலம் குன்றிய  பாதிப்பு  உள்ளது. இவரது மூன்று குழந்தைகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்  அசாருதீன் என்பவர் மூலமாக ரிசர்வு லைன் பகுதியில் உள்ள தனியார்  அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர்.

 



 

 இந்நிலையில் ஐஸ்வர்யாவின் மூன்றாவது குழந்தையான மாணிக்கம் என்ற ஒரு வயது ஆண் குழந்தைக்கு கடந்த 13ஆம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, நரிமேடு நகர்புற சுகாதாரநிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொண்டு நிறுவனத்தினர் தகவல் அளித்ததோடு கொரோனா உறுதியானதால் அரசு கொரோனா மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு செல்வதற்கான பரிந்துரை கடிதம் தொடர்பான ஆவணம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.



இந்நிலையில் நேற்று காலை கொரோனா பாதிப்பால் குழந்தை மாணிக்கம் உயிரிழந்த நிலையில் தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு விட்டதாக கூறி  தத்தனேரி மயான ஆவணங்கள் மற்றும் புதைக்கப்பட்ட படத்தையும் சமூக ஆர்வலருக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனை பார்த்த அசாருதீன் ஆவணங்களில் சந்தேகம் இருப்பதாகவும், குழந்தை காணாமல் போனதாகவும் கூறி தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் நேற்றிரவு மாவட்ட குழந்தை நல அலுவலர் மற்றும் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் தத்தனேரி மயானத்தில் குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட ரசிது எண் போலியானதாக இருந்துள்ளதும், அதே ரசிது எண்ணில் ஏற்கனவே கடந்த மே மாதம் 75வயது நிரம்பிய முதியவர் எரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து தத்தனேரி மயான ஊழியர்கள் மற்றும் நரிமேடு நகர்புற மருத்துவமனையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தத்தனேரி மற்றும் நகர்புற மருத்துவமனை பெயரில் போலியான ஆவணங்களை உருவாக்கி குழந்தையை புதைத்தது போல ஆவணங்களை உருவாக்கியது தெரியவந்துள்ளது. 

 



 

இதனையடுத்து போலியான ஆவணங்களை தயாரித்துள்ளதாக தத்தனேரி மின்மயானம் சுகாதார ஆய்வாளர் மற்றும் நரிமேடு நகர்புற மருத்துவமனை மருத்துவர் ஆகிய இருவர் தரப்பிலும் தொண்டு நிறுவனத்தின் மீது மேலும் இரு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட தத்தனேரி மயானத்தில் மாநகராட்சி நகர்நல அலுவலர் குமரகுருபரன் மற்றும் ஏடிசி கிருஷ்ணகுமார் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தியபோது புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக அரசு இராசாசி மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளங்குழந்தை புதைக்கப்பட்ட இடம் என்பது தெரியவந்துள்ள நிலையில் மாணிக்கம் என்ற குழந்தை புதைக்கப்படவில்லை எனவும் உறுதியாகியுள்ளது. 



இந்நிலையில் புகாருக்குள்ளான தனியார் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். தற்போது மாணிக்கம் என்ற குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் குழந்தை காணாமல் போனது எப்படி ஒருவேளை குழந்தை கடத்தப்பட்டுள்ளதா என்றும், தொண்டுநிறுவனத்தில் மேலும் இது போன்ற குழந்தைகள் குறித்த தகவல்கள் முன்னுக்குபின் முரணாக இருப்பது தெரியவந்த  அடிப்படையிலும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.