கொரோனாவின் கொடிய முகம் உலகம் முழுதும் படர்ந்து, சற்றும் வீரியத்தை குறைத்துக் கொள்ளாமல் விஷத்தை கக்குகிறது. உலக நாடுகளே உறைந்து கொரோனாவுக்கு எதிரான பணிகளை செய்துவருகின்றனர். இந்தியாவும் கொரோனாவுக்கு எதிராக போர்களத்தில் உள்ளது. தமிழகத்திலும் கோர தாண்டவம் பலமாக உள்ளது.


இமேஜ் - மூலிகை வழங்கும் மாணவர்


 


சென்னையில் முன்பைவிட தற்போது குறைவான பாதிப்பு இருந்தாலும் கோவை, மதுரை என பல்வேறு இடங்களிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே உள்ளது. இப்படியான சூழலிலும் பல இடங்களில் மனிதே நேயமும் மலர்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் விருதுநகரை சேர்ந்த கல்லூரி ஆசிரியர் ஒருவர் தனது முன்னாள் மாணவர்களுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக சமூக பணிகளை செய்வது பலரது பாரட்டுகளை பெற்றுள்ளது. 

 



 

  இது குறித்து கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் சி.செல்லப்பாண்டியன் நம்மிடம்பேசும் போது, ‛‛ கொரோனா ஊரடங்கு காலத்தில் நெருக்கடியான இந்த, சூழலில் தன்னார்வலராக பலர் சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நானும் என் மாணவர்களுடம் சமூகத்தில் உதவி செய்யவேண்டும் என முடிவெடுத்தோம்.  கல்லூரியில் என்னிடம் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் என்னைத் தொடர்பு கொண்டு இந்த பேரிடர் காலத்தில் தங்களால் இயன்ற சமூக சேவைகளை மக்களுக்கு செய்ய வேண்டும் என விரும்பினர். எனவே அவர்களின் கூட்டு முயற்சியால் 'என் மாணவர்கள்' -  என்ற அமைப்பை துவங்கி எங்களால் இயன்ற சமூக சேவையை செய்து வருகிறோம். இந்த அமைப்பில் என்னிடம் படித்த மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்கள் இணைந்து சமூக பணியாற்றி வருகின்றனர். கல்லூரி படிப்பு முடிந்த பின் சமூக பணியில் மீண்டும் எனது மாணவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்" என்றார்.

 

 


 

முன்னாள் மாணவன் சரவணகுமார் கூறுகையில், " பேரிடர் காலத்தில் இளைஞர்களின் உதவி மிகவும் முக்கியமானது. நோய் தொற்று பரவும் இந்த சூழலில் பலருக்கும் உதவி தேவைபடுகிறது. ஊரடங்கு நேரம் என்பதால் கூடுதல் சவால் இருக்கும். ஆங்காங்கே மனித கடவுள்கள் உதவி செய்துவருகின்றனர். 

 


காவல்துறையினருக்கு முககவசம்


 

இதனை பின்பற்றி நாமும் களப்பணி செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனால் எங்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் இருந்தது. கல்லூரி காலங்களில்  எங்கள் ஆசிரியர் செல்லப்பாண்டி கொடுத்த பயிற்சி தற்போது நினைவில் வந்தது. இதனால் அவருடன் இணைந்து பணி செய்ய முடிவெடுத்த அவரையும் அழைத்தோம். எந்த மாற்றுக் கருத்தும் சொல்லாமல் குழுவாக இணைத்தார்.

 


 

 

அவரிடம் பல்வேறு கல்லூரிகளில் படித்த மாணவர்களை சேர்த்து எங்களுடன் பணி செய்ய வைத்துள்ளார். ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை தனிமைபடுத்திக் கொள்ளாமல் அவரும் எங்களுடன் பணி செய்துவருகிறார். தற்போது முதல்கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் தீவிரமாக பணி செய்கிறோம். முன்களப்பணியாளர்களுக்கு தேவையான முக கவசம் மற்றும் கபசுர குடிநீரை ஏற்பாடு செய்து வழங்கினோம். 

 


இமேஜ் - பொதுமக்களுக்கு உதவி


 

அதே போல் பொதுமக்கள் கேட்டுகும் துளசி, நொச்சி இலை, தூதுவளை என மூலிகை மருந்துகளை வழங்குகிறோம். தேவைப்படும் இடங்களுக்கு உணவுகளை கொண்டு சேர்க்கிறோம். அசாதாரண சூழலில் எங்களால் என்ன உதவிகள் முடியுமோ அதை அனைத்தையும் செய்கிறோம். அடுத்தகட்டமாக மதுரை, இராமநாதபுரம் பகுதியிலும் மாணவர்கள் செயல்பட உள்ளனர். இதன் மூலம் நம்மாளும் சமூகத்திற்கு உதவ முடிகிறது என்ற நம்பிக்கை வளர்ந்துள்ளது. இது போன்ற களப்பணிகள் பிற்காலத்தில் நாங்கள் வேலை செய்யும் இடங்களிலும் பயன்பெறும் என்ற நம்பிக்கையும் உள்ளது" என உற்சாகமாக தெரிவித்தார்.