தேனி மாவட்டம் அடர்ந்த காடுகளையும், குளிர்ச்சியான சுற்றுசூழலையும் கொண்டிருக்கும் ஒரு அழகிய மாவட்டம். இங்கிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளின் அடர்ந்த வனப்பகுதியை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு இருபது ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா பயிரிடப்பட்டும் கடத்தியும் வந்தனர். பல ஆண்டுகளாக இந்த சட்டவிரோத செயல்களை அடக்க போலீசார் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். தேனி மாவட்டம் வருசநாடு காட்டு பகுதிகளில் பல வருடங்களுக்கு முன்பு கஞ்சா பயிரிடுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டது .ஆனால் இன்னும் ஒரு சில பகுதிகளில் கஞ்சா கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கஞ்சாக்கள் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஆந்திர மாநிலத்தில் இருந்து கம்பம் பகுதிக்கு கஞ்சாவை கடத்தி வந்து அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் விற்பனைக்காக இருசக்கர வாகனம், ஆட்டோ, லாரிகள் பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கடத்தி வருகின்றனர். இந்த செயலை தடுக்க தேனி மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கஞ்சா கடத்துபவர்களையும் பதுக்கி வைத்து விற்பனை விற்பனை செய்பவர்களையும் தீவிரமாக கண்காணித்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.




இந்நிலையில் தேனி மாவட்ட கஞ்சா பதுக்கல், விற்பனையை தடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே உத்தரவின் பேரில் எஸ்.ஐ விஜயானந்த் தலைமையில் 4 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையில் ஈடுபடுத்தப்பட்ட அதிகாரிகள் இரவும் பகலும் முழுவதும் தேனி மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திட்டச்சாலையில் உள்ள கொரியர் நிறுவனத்தில் கம்பம் உலகத் தேவர் தெருவைச் சேர்ந்த ஒருவருக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள பார்சலை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அந்த கொரியர் அலுவலகத்தில் இருந்த அந்த பார்சலில், 2 அட்டைப் பெட்டிகளில் 22 கிலோ எடையில் 10 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.




கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சாவை தனிப்படையினர் பறிமுதல் செய்ததோடு, அந்த பார்சலில் இருந்த முகவரி ஆய்வு செய்ததில் போலி என்பது தெரியவந்துள்ளது. அதனை அடுத்து பார்சலில் உள்ள அலைபேசி எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன் திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி தலைமையில் தேனி எஸ்.பி.பிரவின் உமேஷ் டோங்ரே முன்னிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பார்சல் மற்றும் கொரியர் நிறுவன மேலாளர்கள்,உரிமையாளர்களுடன் நடந்த கூட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை பார்சல்கள் மூலம் கடத்தலை தடுக்கும் பொருட்டு அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




இதற்கு முன் இருசக்கர வாகனம், ஆட்டோ, லாரிகள், பொதுப் போக்குவரத்துகளில் கஞ்சா கடத்தி வரப்பட்ட நிலையில் இப்போது புதிய உத்தியாக பார்சல் மற்றும் கொரியர் நிறுவனங்கள் மூலம் கஞ்சாவை வரவழைத்து விற்பனை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண