தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் மீது லஞ்ச புகார்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தற்காலிக பணியாளர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் அவர்களிடம் விசாரணை நடத்த கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.
தேனி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவர் மற்றும் அவரது கணவர் சேர்ந்து தற்காலிக பணியாளர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் அவர்களிடம் விசாரணை நடத்த கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளனா்.
தேனி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவராக இருப்பவர் சொப்னா ஜோதி. இவர், தனது கணவருடன் சேர்ந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள் நியமனத்தின்போது லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் வழக்கறிஞர் இதுதொடர்பாக அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது முக்கிய உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனா்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திக் தாக்கல் செய்த மனுவில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் அரசு மருத்துவர் சொப்னா ஜோதி மற்றும் அவரின் கணவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கடுமையான புகார் கூறப்பட்டுள்ளது. மனுவில் கூறியதாவது, 2017ஆம் ஆண்டில், மத்திய அரசின் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஐந்து தற்காலிக மருத்துவ பணியாளர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும், தொடர்ந்து வந்த புகார்களை மருத்துவத்துறை அதிகாரிகளிடம் முன்வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், மருத்துவர் சொப்னா ஜோதி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெற வருபவர்களை தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றி அனுப்பி வருகிறார். இதன் மூலம், தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து அவரும் அவரது கணவரும் நிதிப் பலம் பெறுவதாகவும், இதன்மூலம் சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துக்களை அவர்களது பெயரில் சேர்த்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதோடு, அரசு ஊழியராக இருப்பவர், சொத்துக்கள் வாங்கும் போது அரசு அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறையை மீறி, எந்தவொரு முன் அனுமதியும் பெறாமல் சொத்துக்களை சேர்த்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மனுதாரர் மருத்துவத்துறை இயக்குநருக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கும் புகார் அளித்திருந்தார். ஆனால் எந்தவிதமான விசாரணையும் நடைபெறாததால், நேரடியாக உயர்நீதிமன்ற மதுரை கிளையைத் தொடர்பு கொண்டு, வழக்கு பதிவு செய்துள்ளார்.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர். இது தொடர்பாக வரும் நாட்களில் விசாரணைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பல மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த எதிரொலியாக முறைகேடுகள் மற்றும் லஞ்சம் பெறுவதை தடுக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனா்.





















