திண்டுக்கல் மாவட்டத்தில் 80 சதவீத பேருந்துகள் ஓடாததால் பொதுமக்கள் தவித்தனர். மத்திய அரசை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு மேல் நேற்றும் இன்றும் பணிக்கு வரவில்லை.




இதனால் மாவட்டம் முழுவதும் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அதிலும் பெரும்பாலானவை தனியார் பேருந்துகள் ஆகும். தனியார் பேருந்துகளை பொறுத்தவரை ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமின்றி இதர வழித்தடங்களிலும் இயக்கப்பட்டன. அதேநேரம் 80 சதவீத அரசு பேருந்துகள்  இயக்கப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள 10 பணிமனைகளிலும் பேருந்துகள் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் திண்டுக்கல்லை பொறுத்தவரை தென்மாவட்டங்களின் நுழைவுவாயில் போன்று அமைந்துள்ளது. இதனால் மதுரை, திருச்சி, சேலம், கோவை, சென்னை உள்பட அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று மற்றும் இன்றைய தினம் வௌியூர் பேருந்துகளை பார்ப்பதே அரிதாக இருந்தது. இதற்கிடையே அதிலும் நேற்றைய தினம் திங்கட்கிழமை என்பதால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், அந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாமல் தவித்தனர். அதேபோல் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியவில்லை. ஆட்டோ, சரக்கு வாகனங்கள், மினிவேன்களில் அதிக கட்டணம் கொடுத்து சென்றனர். இது ஒருபுறம் இருக்க கொரோனாவால் மூடிக்கிடந்த பள்ளி, கல்லூரிகளில் தற்போது வகுப்புகள் மும்முரமாக நடக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு தினமும் மாணவ-மாணவிகள் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.




அதன்படி தொடர்ந்து வழக்கம் போல் பேருந்துகளில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பேருந்துகள் இன்றி மிகவும் அவதிப்பட்டனர்.  மேலும் உள்ளூர் பேருந்துகள் மட்டுமின்றி வெளியூர் பேருந்துகளும் அதிக அளவில் ஓடவில்லை. இதனால் வெளியூர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வரமுடியாமல் தவித்தனர். அதேநேரம் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டதால், பொதுமக்களின் பார்வை ரயில் மீது திரும்பியது. இதையடுத்து முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுத்து ரயிலில் சென்றனர். இதன் காரணமாக நேற்றைய தினம் அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.


பேருந்துகள் ஓடாததால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உள்பட அனைத்து தரப்பினரும் ஆட்டோ, மினிவேன், வேன்களில் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. ஒருசில கிராமங்களில் இருந்து சரக்கு வாகனங்களில் மக்கள் பயணம் செய்தனர். இதை பயன்படுத்தி வாடகை வாகனங்களில் பொதுமக்களிடம் வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண


யூடியூப்பில் வீடியோக்களை காண