தென் மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் அதிகளவு வித்தியாசமான திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சிவகங்கையில் அக்கினி வீரபத்ரன் முனியாண்டி சாமி கோயில் பச்சை குடில் திருவிழா நடைபெற்றது. இதில் 101 கிடாய்கள் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் 5- ஆண்டுகளுக்குப் பின் நள்ளிரவில் நடந்த கிடாவெட்டு திருவிழாவில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து அசைவ அன்னதானத்தில் பங்கேற்றனர். திருப்புவனம் தேரடி வீதியில் அருள் பாலிப்பவர் அருள்மிகு வீரபத்ரசுவாமி, இக்கோயிலில் 5 வருடத்திற்கு ஒரு முறை நள்ளிரவில் பச்சை ஓலை திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

 

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தின் தேர் அருகே உள்ள வீரபத்ரர் திருப்புவனம் நகரையும் மக்களையும் காப்பவர் என்றும் நள்ளிரவில் ஊரை வலம் வந்து மக்கள் அமைதியாக இருக்கவும் நோய் நொடி இன்றி வாழவும் விவசாயம் செழிக்கவும் அருள் புரிவார் என்று நம்பப்படுகிறது. 



 

 

வீரபத்ர சுவாமிக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நள்ளிரவில் கிராமமே இணைந்து கிடாவெட்டி விருந்து வைப்பது வழக்கம், இந்தாண்டு திருவிழா கடந்த 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி நள்ளிரவில் பச்சை ஓலை ஊர்வலம் நடந்தது. வைகை ஆற்றங்கரையில் தற்காலிக கூரை வேய்ந்த கோயிலில் அருள்பாலிக்கும் வீரபத்ரசாமிக்கு பழங்கள், தேஙகாய் உள்ளிட்டவைகள் படைத்து தினசரி பக்தர்கள் வழிபட்டனர்.

 

நள்ளிரவில் 101 ஆட்டுகிடாய்கள் வெட்டப்பட்டு விருந்து மெகா சைஸ் அண்டாக்களில் தயாரானது. நள்ளிரவு ஒன்றரை மணிக்கு உச்சி கால பூஜை முடிந்த உடன் திருப்புவனம் நகரில் தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் இருபுறமும் அமர்ந்திருந்த 7 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு டிரைசைக்கிள், தள்ளுவண்டி, மினிவேன் உள்ளிட்டவற்றில் சாதம், அசைவ உணவுகள் உள்ளிட்டவை கொண்டு சென்று பரிமாறப்பட்டது.



பக்தர்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இக்கோயிலில் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை பச்சை குடில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.