கோவை நகரில் ஆட்டோ மற்றும் கார் வாடகை வாகனங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் LPG எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதால், உக்கடம் பகுதியில் செயல்பட்டு வந்த ஆட்டோ LPG எரிவாயு நிரப்பு நிலையம் திடீரென மூடப்பட்டு, வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

கோவை நகரில் இயங்கி வரும் பல LPG எரிவாயு பங்குகளில் கடந்த சில நாட்களாக எரிவாயு சரியான அளவில் கிடைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சில பங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. குறிப்பாக உக்கடம் பகுதியில் செயல்பட்டு வந்த LPG நிரப்பு நிலையம் மூடப்பட்டதால், அங்கு எரிவாயு நிரப்ப வந்த ஆட்டோ மற்றும் கார் ஓட்டிகள் பலர் திரும்பிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

எரிவாயு நிரப்ப வரிசையில் காத்திருந்த ஓட்டுநர்களுக்கு, LPG கேஸ் லோடு வராததால் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பங்க் நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. புதிய கேஸ் லோடு வந்ததும் மீண்டும் விநியோகம் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Continues below advertisement

எரிவாயு நிரப்ப வரிசை

டீசல் மற்றும் பெட்ரோலை ஒப்பிடும்போது LPG எரிவாயு குறைந்த செலவில் கிடைப்பதால், கோவையில் இயங்கும் பெரும்பாலான ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் LPGயை அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. தற்போது LPG ஒரு லிட்டர் ரூ.64.80 என்ற குறைந்த விலையில் கிடைப்பதால், தினசரி ஓட்டுநர்கள் இதையே நம்பி இயக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாட்டால், வேலை நேரத்தில் வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சிலர் பல இடங்களில் சுற்றியும் எரிவாயு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக தெரிவித்தனர்.

கோவை நகரில் LPG எரிவாயு தட்டுப்பாடு நீடிக்காமல், தேவையான அளவில் விரைவாக விநியோகம் செய்ய வேண்டும் என்றும், வாடகை வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.