காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்கள் கண்ணீர்: ஜரிகை தட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவலம்!
Kanchipuram: "வாடகை கூட கட்ட முடியவில்லை என காஞ்சிபுரத்தில் ஜரிகை கிடைக்காததால் கண்ணீருடன் பட்டு நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்"

காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு சங்கத்தில் நெசவாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஜரிகை வழங்கக்கோரி நெசவாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டு நகரம் காஞ்சிபுரம்
உலகப்புகழ் பெற்ற பட்டு நகரமான காஞ்சிபுரத்தில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருவதன் எதிரொலியாக, பட்டு நெசவுத் தொழில் கடும் முடக்கத்தைச் சந்தித்துள்ளது. காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப் புடவைகளின் ஆன்மாவாகக் கருதப்படும் 'தங்கச் சரிகை' தட்டுப்பாடு காரணமாக, இன்று பேரறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் நகரம் மற்றும் பட்டு நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், லட்சக்கணக்கான குடும்பங்கள் கைத்தறி நெசவுத் தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகளில் அசல் வெள்ளி இழையில் தங்க முலாம் பூசப்பட்ட ஜரிகைகள் பயன்படுத்தப்படுவது தனிச்சிறப்பாகும்.
ஜரிகை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு
ஆனால், கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சந்தையில் உச்சத்தைத் தொட்டுள்ளதால், ஜரிகை கொள்முதல் செய்வதில் கூட்டுறவு சங்கங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஜரிகை கொள்முதல் செய்யப்படாததால், கடந்த மூன்று மாதங்களாக 1,000-க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு நெசவு செய்யத் தேவையான ஜரிகை வழங்கப்படவில்லை. ஜரிகை பற்றாக்குறையினால் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக நெசவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிகாரிகளை முற்றுகையிட்டனர்
இதனால் ஒவ்வொரு நெசவுத் தொழிலாளர் குடும்பத்திற்கும் மாதம் சுமார் 20,000 ரூபாய் வீதம், கடந்த மூன்று மாதங்களில் 60,000 ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமலும், வீட்டு வாடகை கூட செலுத்த முடியாமலும் தவித்து வரும் 300-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள், இன்று சங்க அலுவலகத்திற்குள் அதிரடியாகப் புகுந்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
பலமுறை கோரிக்கை விடுத்தும் நிர்வாகம் முறையான பதில் அளிக்காததால், நெசவாளர்கள் சங்க வளாகத்திலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். "பட்டு நகரத்தின் பெருமையைத் தாங்கிப் பிடிக்கும் எங்களுக்கு, ஜரிகை கிடைக்காததால் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது" என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தங்கம் விலை உயர்வைச் சமாளிக்க அரசு உரிய மானியம் வழங்கி, ஜரிகை தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.























