காஞ்சிபுரம் வடக்குப்பட்டு பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: 26 ஆண்டுகளுக்குப் பிறகு அருள் மழை!
"காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் விழா, வருகின்ற பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது."

காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள வடக்குப்பட்டு அருள்மிகு சுந்தர வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 20 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாகும். இங்குள்ள பொய்கையில் அவதரித்த இலட்சுமிதேவிக்குப் பெருமாள், சுந்தர வரதராஜனாய் காட்சியளித்து அருள்புரிந்தமையால் உத்தரலட்சுமிபுரம் என்று இத்தலம் சிறப்பித்து வழங்கப்படுகிறது.
தல புராணம் கூறுவது என்ன ?
புராண காலத்தில் தென்னாட்டைச் சேர்ந்த அடியவர் ஒருவர் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டு பூஜித்து வந்தார். ஒருசமயம் வடநாடு சென்று திரும்பிய அவர் வடக்குப்பட்டு தலத்தினைக் கடக்கும்போது இரவுவேளை வந்தமையால் அன்றிரவு அங்கு தங்கினார்.
அவரது கனவில் ஆதிகேசவப் பெருமாள் காட்சியளித்து அருள்புரிந்தார். பெருமாளின் கருணையை எண்ணி மகிழ்ந்த அந்த அடியவர் ஆதிகேசவப் பெருமாளுக்கு அங்கு ஒரு திருக்கோயிலைக் கட்டினார். பெருமாள் இத்தலத்தின் கருவறையில் பூமி நீளாதேவி சமேதராய் காட்சியருளுகின்றார். இத்தலத்திற்கு 1999 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. மூலவர், தாயார் விமானங்கள் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனைச் சீரமைத்து கும்பாபிஷேகம் செய்து தருமாறு கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
கோயில் திருப்பணிகள்:
இதனை ஏற்று இத்தலத்தினைச் சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவிட்டார்கள். அதன்படி மூலவர், தாயார் விமானங்கள் பழுதுபார்த்து புதுப்பித்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், சுற்றுச்சுவர் சீரமைத்தல், அலுவலகம் கட்டுதல், மின் மராமத்து பணி, புதிய மரக்கதவுகள் அமைத்தல், வாகன மண்டபம் கட்டுதல் ஆகிய திருப்பணிகள் சுமார் ரூ.90 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தன.
கோவில் கும்பாபிஷேக விழா
இத்திருக்கோயிலுக்கு 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. புதன்கிழமை காலையில் துவாரபூஜை, ரட்சாபந்தனம், மகா கும்பஸ்தாபனம், வாஸ்து ஓமம் நடைபெற்றன. மாலையில் விமானாதி சாயாதி வாசம், அனைத்து மூர்த்திகளுக்கும் விசேஷ திருமஞ்சனம், துவாரபூஜை ஓமம் நடைபெற்றது.
வியாழக்கிழமை காலையில் துவாரபூஜை ஓமமும், மதியவேளையில் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனமும், மாலையில் துவாரபூஜை ஓமமும், இரவு சயனாதி வாசமும் நடைபெற உள்ளது.
26 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்
வெள்ளிக்கிழமை காலையில் விஸ்வரூபம், துவாரபூஜை, சாந்தி ஓமம், பிராயச்சித்த ஓமம், லக்னபிரீதி, கிருகபிரீதி ஆகியன நடைபெற்று காலை 8.30 மணிக்குமேல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றிரவு வடக்குப்பட்டு கிராமத்தில் பெருமாள் வீதி உலாவும் நடைபெற உள்ளது. சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திருக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் திருக்கோயில் முழுவதும் மலர்மாலை தோரணங்கள், வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு புதன்கிழமை காலையில் மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியால் திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், துறை ஆய்வர் ரம்யா, அறங்காவலர் குழு தலைவர் விஎஸ்.வெங்கடகிருஷ்ணன், அறங்காவலர்கள் வி.எஸ்.ரங்கநாதன், வி.சுதர்சன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் விஎஸ். கோதண்டராமன், முன்னாள் அறங்காவலர் சௌரிராஜன், ஊராட்சி தலைவர் நந்தனிமேத்தா வசந்தகுமார் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.























