காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சாம்சங் ஊழியர்கள் தொடர்ந்து 24 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற போராட்டத்தில் குடும்பத்துடன் சாம்சங் ஊழியர்கள், போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.


சாம்சங் ஊழியர்கள் போராட்டம்


காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் ஆலை தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்கம் அங்கீகாரம் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றுடன் 24 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




குடும்பத்துடன் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள் 


இந்தநிலையில், காஞ்சிபுரம் வணிகர் வீதியில் குடும்ப உறுப்பினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட காவல் துறை, அனுமதி வழங்கிய நிலையில் நேற்று இரவு திடீரென போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத்தொடர்ந்து வழக்கம் போல சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போராட்ட பந்தலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்களது, மனைவி குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன் காரணமாக இங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த போராட்ட விவகாரத்தில் இது வரை 5 முறை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தலைமையில் ஆலை நிர்வாகம், தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 7 ம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உற்பத்தி பாதிப்பு


சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.ஐ.டி.யூ சங்கத்தை தொடங்கினர். சங்கத்திற்கு அனுமதி வேண்டும் , ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 17வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே 4 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சாம்சங் தொழிற்சாலையில் உற்பத்தி பெரும் அளவு பாதிப்படைந்துள்ளது. 




இதனிடையே இந்த போராட்டம் தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, விரைவான மற்றும் இணக்கமான தீர்வை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் தீர்வை ஏற்படுத்த, தனது அமைச்சகம் முழு ஆதரவை வழங்கும் எனவும் மன்சுக் மாண்டவியா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.


கோரிக்கைகள் என்னென்ன ?


சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியூ சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும். இன்டெர்னல் கமிட்டி அமைப்பதை கைவிட வேண்டும். சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க சிஐடியூ உறுப்பினர்களை நிறுவனம் உருவாக்கும் போட்டி தொழிலாளர் கமிட்டியில், இணையுமாறு ஆலைக்குள் பணி செய்யும் தொழிலாளர்களை அச்சுறுத்துவது கட்டாயப்படுத்துவது மிரட்டுவது போன்ற வன்முறை நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.




போட்டி அமைப்பை உருவாக்குவதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொள்ள வேண்டும். சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் அமைத்துள்ள சிஐடியூ தொழிற்சங்கத்தை பதிவு செய்ய விடாமல் , தொழிற்சங்க பதிவாளர் அலுவலகத்தை நிர்பந்திப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்தப்போராட்டத்தின் மூலம் வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து சாம்சங் ஊழியர்கள் 24 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் , ஈடுபட்டு வருவதால் சாம்சங் நிறுவனத்திற்கு தலைவலி அதிகரிக்க தொடங்கியுள்ளது.