காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது. மேயர் தேர்தலில் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரத்தின் முதல் மேயராக பதவி ஏற்றார். துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருநாதன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஆரம்ப கட்டத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் பல்வேறு வகையில் பிரச்சனைகளை எழுப்ப தொடங்கினர்.




தங்கள் வார்டுகளுக்கு நிதி ஒதுக்குவதில்லை, மாநகராட்சி விஷயங்களில் மேயரின் கணவர் யுவராஜ் தலையிடுகிறார். ஒரு சில கவுன்சிலர்கள் நினைப்பது மற்றும் நடக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் முன் வைத்தனர். ஒவ்வொரு முறை மாமன்ற கூட்டம் நடைபெறுகின்ற பொழுதும், கூட்டம் சலசலப்புடன் நடைபெற்று வந்தது.


திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி


இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர். இதற்கு முக்கிய காரணமாக, திமுக கவுன்சிலர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதையும், அவர்களுடைய வார்டுகளுக்கு நிதி ஒதுக்கிடும் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை திமுக கவுன்சிலர்கள் முன்வைக்க தொடங்கினர். ஆரம்ப கட்டத்தில் இந்த பிரச்சனை சிறிதாக இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க துவங்கியது.


சமாதான பேச்சு வார்த்தை


எதிர்க்கட்சி கவுன்சிலர்களுடன் இணைந்த திமுக கவுன்சிலர்கள், நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் பிரச்சினை அதிகரிக்கவே சமாதான பேச்சு வார்த்தைகளும் பலமுறை நடைபெற்றது. அமைச்சர் நேரு அனைத்து கவுன்சிலர்களையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தையும் செய்து பார்த்தார் இருந்தும் மேயர் எதிர்ப்பு திமுக கவுன்சிலர்கள் பின்வாங்கவில்லை.


தொடரும் காய் நகர்த்தல்..


இப்பொழுது இருக்கும் சூழலில் மேயர் தரப்பிற்கு எதிராக 33 கவுன்சிலர்கள் உள்ளனர். தொடர்ந்து நேர் எதிர் தரப்பு கவுன்சிலர்கள், நிலை குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து மேயருக்கு நெருக்கடியை அதிகரித்தனர். இதுபோக ஆதரவாக இருக்கும் மேற்கு மண்டல தலைவர்களுக்கு எதிராகவும், காய்களை நகர்த்த துவங்கி உள்ளனர். 


 




காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள இரண்டாவது மண்டல குழு தலைவர் சந்துரு மீதான தன் ஆதரவை விளக்கி கொள்வதாக கவுன்சிலர்கள் கமலக்கண்ணன், ஷர்மிளா, புனிதா, குமரன், ஷாலினி, விஜிதா மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகனிடம் கடிதம் அளித்துள்ளனர்.


 


மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் 


இந்நிலையில் மேயரை மாற்ற கோரி நம்பிக்கையில்லா தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் கொண்டுவர உத்தரவிடக்கோரி கடந்த மாத 07.06.2024 அன்று மாவட்ட ஆட்சியரின் சந்தித்து  30-க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மனு வழங்கினார்கள். இந்நிலையில் இதே கோரிக்கையை முன்னிறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். ஆனால் அந்த மனுவில் மேயரை நீக்க கூறும் காரணங்கள் முறையாக குறிப்பிடாமல், காரணங்கள் போதுமானதாகும் இல்லை என தெரிவித்து உள்ளார்.


 




இதனால் , ஆணையர் தெரிவித்த மூன்று காரணங்களும் மேயர் மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தவிர்க்க வேண்டும் எனும் நோக்கிலேயே உள்ளதால்,மாநகராட்சி ஆணையரை மாற்றம் செய்து புதிய ஆணையரை கொண்டு நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டாவது முறையாக கோரிக்கை மனுவினை அளிக்க, மீண்டும் 33 கவுன்சிலர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.