Sridhar Vembu: விவாகரத்து..! மனைவிக்கு கல்தா, சொத்துகளை மாற்றிய ஸ்ரீதர் வேம்பு? ரூ.15,278 கோடியை செலுத்த உத்தரவு
Sridhar Vembu Divorce: தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விவாகரத்தின் ஒரு பகுதியாக, ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான பத்திரத்தை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sridhar Vembu Divorce: ஸ்ரீதர் வேம்பு தனது பிரிந்த மனைவியுடனான விவாகரத்து வழக்கில், 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பத்திரத்தை தாக்கல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கு:
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தனது மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசனுடனான விவாகரத்து கோரும் வழக்கில், 1.7 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 15,278 கோடி) மதிப்பிலான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது. குழந்தை பராமரிப்பு, திருமண சொத்துக்கள் மற்றும் ஜோஹோ நிறுவனத்தின் பங்குகள் தொடர்பான உயர்மட்ட சட்ட தகராறில் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை கவனத்தை ஈர்த்துள்ளது. சீனிவாசன் தாக்கல் செய்த அவசர மனுவைத் தொடர்ந்து கலிபோர்னியா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையிலான நடவடிக்கையாக இதை நீதிமன்றம் குறிப்பிட்டாலும், திருமண சொத்து மீதான பிரமிளாவின் உரிமைகளுக்கு ஏற்படக்கூடிய பாரபட்சத்தைத் தடுக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று விளக்கமளித்துள்ளது.
கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இருவரும் சேகரித்த சொத்துக்களை மையமாகக் கொண்டது இந்த சர்ச்சை வெடித்துள்ளது. கலிபோர்னியா சட்டத்தின் கீழ், திருமண பந்தத்தில் நீடிக்கும் போது வாங்கப்பட்ட சொத்துகள், அவை எங்கு இருந்தாலும் இருவருக்குமான கூட்டுச் சொத்தாகவே கருதப்படுகிறது.
திருமண உறவும்.. விவாகரத்தும்..
ஐஐடி-மெட்ராஸ் முன்னாள் மாணவரான வேம்பு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற 1989 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு 1993 ஆம் ஆண்டு கல்வியாளரும் தொழில்முனைவோருமான பிரமிளாவை திருமணம் செய்து கொண்டார். 1996 ஆம் ஆண்டு, வேம்பு தனது சகோதரர்கள் மற்றும் ஒரு நண்பருடன் இணைந்து அட்வென்ட்நெட்டை நிறுவினார். பின்னர் இந்த நிறுவனம் 2009 இல் ஜோஹோ கார்ப்பரேஷன் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
இந்த தம்பதி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக கலிபோர்னியாவில் வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு 26 வயதில் ஆட்டிசம் குறைபாடு கொண்ட ஒரு மகனும் உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில், வேம்பு இந்தியாவுக்கு குடிபெயர்ந்து தமிழ்நாட்டில் உள்ள தனது மூதாதையர் கிராமத்திலிருந்து ஜோஹோவை நடத்தத் தொடங்கினார். விவாகரத்து நடவடிக்கைகள் 2021 இல் தொடங்கப்பட்டன.
பிரமிளாவின் குற்றச்சாட்டு
நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது, சீனிவாசன் இந்தியாவுக்கு குடிபெயர்ந்த பிறகு தன்னையும், தங்களது சிறப்புத் தேவையுள்ள மகனையும் வேம்பு கைவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஜோஹோவின் அறிவுசார் சொத்துரிமை மற்றும் உரிமைப் பங்குகளை தனது அனுமதியின்றி சிக்கலான பரிவர்த்தனைகள் மூலம் இந்தியாவிற்கு மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். அவரது கருத்தின்படி, ஜோஹோவின் பெரும்பாலான பங்குகள் வேம்புவின் சகோதரர்கள் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் அவரது சகோதரி ராதா வேம்பு 47.8% பங்குகளை வைத்திருக்கிறார், சகோதரர் சேகர் வேம்பு சுமார் 35.2% பங்குகளை வைத்திருக்கிறார். வேம்பு சுமார் 5% உரிமையை தக்க வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது, இதன் மதிப்பு சுமார் $225 மில்லியன் ஆகும். இந்த மாற்றங்கள் சமூக சொத்துக்களை நிர்வகிக்கும் கலிபோர்னியா சட்டத்தை மீறுவதாக சீனிவாசன் குற்றம் சாட்டினார். வேம்பு குற்றச்சாட்டுகளை மறுத்து, அவற்றை "முழுமையான கற்பனை" என்று கூறி, தனது மனைவி மற்றும் மகனுக்கு தொடர்ந்து நிதி உதவி செய்து வருவதாகக் கூறினார்.
50% பங்குகளை கோரும் பிரமிளா?
பிரமாண பத்திர உத்தரவு குறித்த செய்திகளைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுகள் தவறானவை என நிராகரித்ததன் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு முன்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வேம்புவின் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சி. மெல்ச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான சமூக வலைதள பதிவில், ஜோஹோவின் தாய் நிறுவனத்தில் வேம்புவின் 50% பங்குகளை உரிமைகோர ஸ்ரீனிவாசன் மறுத்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், “பத்திர உத்தரவு செல்லாது, இணங்க முடியாது, தற்போது மேல்முறையீட்டில் உள்ளது என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கின் முடிவு இந்தியாவின் மிக முக்கியமான தொழில்நுட்ப தொழில்முனைவோர்களில் ஒருவருக்கும் ஜோஹோவின் உரிமையாளர் கட்டமைப்பிற்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஹோ நிறுவனத்தின் மூலம் மட்டும் ஸ்ரீதர் வேம்புவின் சொத்து மதிப்பு சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது.





















