இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்ற நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய்-யை 2025 மே 14 முதல் நாட்டின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய்-யை உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான ஆணையில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி அவரது நியமனம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசின் நீதித்துறை வெளியிட்டுள்ளது. நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் 2025 மே 14 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பூஷண் ராமகிருஷ்ண கவாய் குறித்தும், அவர் வகித்த பதவிகள் குறித்தும் பார்ப்போம்.
- 1960ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிறந்த அவர், 1985 ம் ஆண்டு மார்ச் 16 அன்று வழக்கறிஞராகப் பணியில் சேர்ந்தார். முன்னாள் அட்வகேட் ஜெனரலும் உயர்நீதிமன்ற நீதிபதியுமான மறைந்த பாரிஸ்டர் ஸ்ரீ ராஜா எஸ் போன்சலுடன் இணைந்து 1987 வரை பணியாற்றினார்.
- 1987 முதல் 1990 வரை மும்பை உயர் நீதிமன்றத்தில் தனி வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
- 1990ம் ஆண்டுக்குப் பிறகு, அவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கறிஞராக இருந்தார்.
-
1992ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1993ம் ஆண்டு ஜூலை வரை மும்பை, நாக்பூர் அமர்வில் உள்ள உயர் நீதிமன்ற நீதித்துறையில் உதவி அரசு வழக்கறிஞர் மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணியாற்றினார்.
- 2000ம் ஆண்டு 17 ஜனவரி அன்று நாக்பூர் அமர்வின் அரசு வழக்கறிஞராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
-
இதனை தொடர்ந்து, நவம்பர் 14, 2003 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார், மேலும் நவம்பர் 12, 2005 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
-
மும்பையில் உள்ள முதன்மை இருக்கையில் உள்ள அனைத்து வகையான பணிகளையும் கொண்ட அமர்வுகளுக்கும், நாக்பூர், அவுரங்காபாத் மற்றும் பனாஜியில் உள்ள அமர்வுகளுக்கும் அவர் தலைமை தாங்கினார். அவர் மே 24, 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
-
இந்நிலையில், வரும் மே மாதம் 14 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள பூஷன் ராமகிருஷ்ண கவாய், 2025ம் ஆண்டு நவம்பர் 23 அன்றுவரை பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
கையாண்ட வழக்குகள்:
அவர் அரசியலமைப்பு சட்டம் மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான நாக்பூர் மாநகராட்சி, அமராவதி நகராட்சி மற்றும் அமராவதி பல்கலைக்கழகத்தின் சட்ட பிரதிநிதியாக வழக்குகளை நடத்தியிருக்கிறார். விதர்பா பிராந்தியத்தில் உள்ள பல்வேறு தன்னாட்சி அமைப்புகள் மற்றும் சிகாம், டி.சி.வி.எல் போன்ற நிறுவனங்களுக்கும், பல்வேறு நகராட்சி மன்றங்களுக்கும் அவர் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜரானார்.
உலான்பாதர் (மங்கோலியா), நியூயார்க் (அமெரிக்கா), கார்டிஃப் (இங்கிலாந்து) மற்றும் நைரோபி (கென்யா) உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மாநாடுகளில் அவர் கலந்து கொண்டார்.
கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளில் பல்வேறு அரசியலமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து விரிவுரைகளை வழங்கியுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளில், அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டம், சிவில் சட்டம், குற்றவியல் சட்டம், வணிக தகராறுகள், நடுவர் சட்டம், மின்சாரச் சட்டம், கல்வி விஷயங்கள், சுற்றுச்சூழல் சட்டம் போன்ற பல்வேறு பரிவுகளில் சுமார் 700 அமர்வுகளில் இருந்திருக்கிறார்.
குடிமக்களின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்த அரசியலமைப்பு அமர்வு தீர்ப்புகள் உட்பட சுமார் 300 தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.