பெங்களூருவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக இயக்கப்பட்டு வரும் எலக்ட்ரிக் பஸ்கள் மூன்று இடங்களில் சார்ஜ் செய்யப்படுகிறது. மெஜஸ்டிக், புத்தனஹல்லி, ஏலஹன்கா ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் சார்ஜ் செய்யப்படுகிறது. இப்போது இந்த சார்ஜிங் ஸ்டேஷன் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாகியிருக்கிறது.


இந்த எலக்ட்ரிக் பேருந்து சார்ஜ் ஆகும் வீடியோவை சமூக வலைதளங்களில் நிறைய பேர் பகிர்ந்து வருகின்றனர். பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகத்தில் இ பஸ்கள் எனப்படும் எலக்ட்ரிக் பேருந்துகள் இருக்கின்றன. சிங்கிள்-முழு சார்ஜில் இந்த எலக்ட்ரிக் பேருந்தில் 120கிமீ தூரத்திற்கு பயணிக்கலாம். இந்த பேருந்தின் அதிகப்பட்ச வேகம் 70kmph ஆகும். இதன் பேட்டரியை விரைவான சார்ஜர் மூலம் 60% சார்ஜ் நிரப்ப 45 நிமிடங்கள் தேவைப்படும்.


இந்த எலக்ட்ரிக் பேருந்தின் முன்பக்கத்தில் ஒன்று, பின்பக்கத்தில் ஒன்று என இரு சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற பெங்களூர் மாநகர பேருந்துகளில் வழங்கப்படுவதை போல் இந்த எலக்ட்ரிக் பேருந்திலும் முன்பக்கத்தில் மற்றும் மத்தியில் இரு ஆட்டோமேட்டிக் கதவுகள் வழங்கப்பட்டுள்ளன. 


எலக்ட்ரிக் போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசாங்கம் 2015இல் ஃபேம்-1 திட்டத்தையும், 2019இல் ஃபேம்-2 திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த இரு திட்டங்களிலும் சென்னை உட்படுத்தப்படவில்லை. கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் மற்றும் தஞ்சாவூர் என தமிழகத்தின் டயர்-2 நகரங்கள் கூட இந்த லிஸ்ட்களில் இடம்பிடித்தன. ஆனால் சென்னை இல்லை. 


கடந்த மாதம் பெங்களூவில் புதிதாக 100 எலக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் இந்த சார்ஜர் வீடியோ வைரலாகி வருகிறது.