உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பாஜக எம்எல்ஏ பொதுக் கூட்டத்தின்போது மலைப்பாம்பு ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 8 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் மலைப்பாம்பு பில்ஹார் எம்எல்ஏ ராகுல் பச்சா சோன்கர் வீட்டின் கதவில் நெளிவது நன்றாகப் பதிவாகியுள்ளது. இதனையடுத்து உடனடியாக வாத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் பாம்பை பிடித்துச் சென்றனர். பாம்பு என்றால் படையும் நடங்கும் என்பார்கள் அப்புறம் இந்தப் பாம்பை பார்த்து கட்சிக் கூட்டம் மட்டும் எப்படி பயப்படாமல் இருக்கும்?


மலைப்பாம்புகள் விஷம் கொண்டவை இல்லை என்றாலும் கூட அதன் பிரம்மாண்ட தோற்றம் பயம் வரவழைக்கக் கூடியதே.


இந்தியாவில் காணப்படக்கூடிய 338 பாம்பினங்களில் 71 பாம்புகள்தான் நஞ்சுடையவையாக அறியப்பட்டிருக்கின்றன. இவற்றில் 4 பாம்பினங்கள் (நல்ல பாம்பு, கட்டுவரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன்) மட்டும் மனிதர்களின் வாழ்விடங்கள் அருகில் பரவலாக வசிப்பதோடு அதிக மனித இறப்பை உண்டுபண்ணுபவை. இவை இந்தியாவின் முக்கிய நஞ்சுப் பாம்புகளாக உள்ளன. மீதமுள்ள அனைத்து நஞ்சுப் பாம்புகளும் அடர் காடுகள், கடல், குறிப்பிட்ட சில நிலப்பரப்புகளில் வாழ்ந்து வருவதால் நம் கண்ணில் படுவது அரிது. இவை இரவிலேயே நடமாடுகின்றன. ஆனால், இந்தியாவில் ஆண்டிற்கு சில லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள், பல ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம், கூலி வேலை செய்பவர்கள்.


பாம்பால் ஒருவர் கடிபடும்பொழுது முதலில் அவருக்கு ஏற்படுவது பயம், பதற்றம், எதிர்காலம் குறித்த கேள்வி போன்றவையே. பாம்புக்கடிக்கான மருந்து இருப்பதால் நாம் பிழைத்துவிடுவோம் என்கிற நம்பிக்கை முதலில் அவசியம். கடிபட்ட பாம்பிடமிருந்து முதலில் விலக வேண்டும். பாம்பு கடித்த இடத்தையும் நேரத்தையும் அறிந்திருக்க வேண்டும். நேரம் தாழ்த்தாமல் உடனே அரசு மருத்துவமனையின் பாம்புக்கடி தீவிர சிகிச்சைப் பிரிவை அடைந்து, உரிய சிகிச்சையைப் பெற வேண்டும். 






கடிபட்டவர் இயன்றவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டும். மருத்துவ வசதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவரை இடது பக்கமாக ரெக்கவரி பொசிஷன்-இல் படுக்க வைக்கவும். பாரம்பரிய மருத்துவ முறை எனும் பெயரில் அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கக்கப்படாத அல்லது ஆபத்தை விளைவிக்கக் கூடிய எந்த வகையான முதலுதவி சிகிச்சையையும் செய்யக்கூடாது.