உத்தர பிரதேச மாநிலத்தில் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்காததால்,  மருமகளை மாமியார் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




உத்தரப்பிரதேசம் மாநிலம், கவுசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாலி பேகம். இவருக்கு 33 வயதாகிறது. இவருக்கும் ஃபிரோஸ் அகமதுவிற்கும் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மருமகள் சாலிபேகத்திற்கும், அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது  மாமியார் சாலி பேகத்தின் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றியதாக கூறப்படுகிறது. துகுறித்து உடனடியாக தனது சகோதரர் கவுஸ் முகம்மதுவிற்கு சாலிபேகம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த அவரது சகோதரர் கவுஸ் முகம்மது, தனது சகோதரி சாலிபேகத்தை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அங்கு சிகிச்சை பலன்றி சாலிபேகம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.


இது தொடர்பாக அவரது சகோதரர் கவுஸ் முகம்மது போலீஸில் புகார் அளித்தார். அதில்," பேகம் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஃபிரோஸ் அகமதுவை திருமணம் செய்து கொண்டார். பேகத்திற்கு குழந்தை பிறக்காததால், அவரது மாமியார் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார். சம்பவத்தன்று பேகம் தன்னை வீட்டிற்கு அழைத்த போது அங்கு சென்று பார்த்தேன். அவர் ஆபத்தான நிலையில் இருந்தார். அவரை சிறாத்துவில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பேகம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்” என புகாரில் தெரிவித்துள்ளார்.


இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், சாலி பேகத்தின் கணவர் ஃபிரோஸ் அகமது, அவரது தாய் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கெளசாம்பி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பகதூர் சிங் தெரிவித்தார். மேலும் இறந்த சலிம் பேகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.