உத்தரகாசியில் கடந்த இரண்டு வாரங்களாக சில்க்யாரா-பர்கோட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றுடன் மீட்பு பணிகள் 16வது நாளை தொட்டுள்ளது. நேற்று புதிய முயற்சியாக சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் சுமார் 20 மீட்டர் வரை துளையிடும் பணி நடைபெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்களை மீட்க போடப்பட்ட 5 திட்டங்களில் செங்குத்து துளையிடுதலும் ஒன்றாகும். சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை சென்றடைய ஏற்கனவே 19. 2 மீட்டர் துளை போடப்பட்ட நிலையில், இன்னும் 86 மீட்டர் செங்குத்து துளையிடும் பணி மீதம் இருக்கிறது. இந்த பணிகள் முழுமையடைய இன்னும் 4 நாட்களாவது ஆகும் என்று கூறப்படுகிறது. 


தொழிலாளர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் - அதிகாரிகள் தகவல்


தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் லிமிடெட் (NHIDCL) நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அகமது கூறியதாவது, “சட்லஜ் ஹைட்ரோபவர் கார்ப்பரேஷன் தொடங்கியுள்ள செங்குத்து துளையிடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. ஏதேனும் சிக்கல்கள் இல்லாமல் இப்படியே தொடர்ந்தால், வரும் வியாழன் வரை அதாவது இன்னும் நான்கு நாட்களில் முடித்துவிடலாம் என எதிர்பார்க்கலாம். 700 மிமீ குழாய்கள் துளையிட்டு 'எஸ்கேப் பாதை' உருவாக்கப்படுகிறது. இதிலிருந்து சிறிது தொலைவில், 70 மீட்டரை எட்டிய 200 மிமீ விட்டம் கொண்ட மெல்லிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.  


துளையிடுவதில் ஏற்பட்ட சிக்கல்கள்: 


சுரங்கப்பாதையின் சில்க்யாரா முனையிலிருந்து அமெரிக்கன் ஆகர் இயந்திரம் மூலம் கிடைமட்டமாக துளையிடுவதில் மீண்டும் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டதால், தொழிலாளர்களை சென்றடைய செங்குத்து துளையிடல் என்னும் முறை தேர்வு செய்யப்பட்டது. சுரங்கப்பாதையில் 60 மீட்டர் பரப்பளவில் இடிபாடுகள் பரவியுள்ளன. இதனால் சுமார் 25 டன் எடை கொண்ட ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் அந்த இடிபாடுகளில் சிக்கி கடந்த வெள்ளிக்கிழமை உடைந்தது. 


இதுகுறித்து மீட்பு பணிகளுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள நோடல் அதிகாரி நீரஜ் கைர்வால் கூறியதாவது: பிளாஸ்மா கட்டர் மற்றும் லேசர் கட்டர் மூலம் இடிபாடுகளில் சிக்கிய ஆஜர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. இரவு 7 மணி நிலவரப்படி 8.15 மீட்டர் தூரம் மட்டுமே ஆஜர் இயந்திரம் வெளியே எடுக்க முடிந்தது. பிளாஸ்மா கட்டர் ஹைதராபாத்தில் இருந்து சில்க்யாராவுக்கு நேற்று காலை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.” என்று தெரிவித்தார்.


தொடரும் உயிரைக் காப்பாற்றும் போராட்டம்:


ஆகர் இயந்திரத்தின் பாகங்கள் முழுமையாக அகற்றப்பட்டவுடன், மீதியுள்ள 10-12 மீட்டர் இடிபாடுகளை மீட்புப் பணியாளர்கள் கையால் துளையிட்டு அகற்றுவார்கள். ஒரு குறுகிய இடத்திற்குள் இந்த கையால் நடத்தப்படும் உடைப்பு பணியில், ஆகர் இயந்திரத்தினால் ஏற்கனவே போடப்பட்ட துளைக்குள் சென்று கைகளால் துளையிடுவார். பின்னே செல்லும் மற்ற தொழிலாளர்கள் ஒரு கப்பி மூலம் குப்பைகளை வெளியே அனுப்புவர். ஆனால், இந்த கைகளால் துளையிடும் பணி அதிக நேரம் எடுக்கும் என தெரிகிறது. இதற்கிடையில், சுரங்கப்பாதையின் பார்கோட் முனையிலிருந்தும் தோண்டும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுவரை 10 மீட்டர் தோண்டும் பணி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கரையில் இருந்து மொத்தம் 483 மீட்டர் தோண்டும் பணி நடைபெற 40 நாட்கள் ஆகலாம் என்றும், இது மாற்று வழியாகவே இந்த தோண்டும் பணி நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.