இந்தியாவில் சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றிப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இது நின்றபாடில்லை.


உத்தர பிரதேசத்தில் மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவம்:


இந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த்நகர் மாவட்டத்தில் சமூக விரோதிகள் சிலர் இரண்டு சிறுவர்களை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, அவர்களின் ஆணுறுப்பில் பச்சை மிளகாய் வைத்து தேய்த்துள்ளனர்.


திருடியதாகக் கூறி, பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஊசி போட்டுள்ளனர். சிறுவர்களை கட்டாயப்படுத்தி பச்சை மிளகாய் சாப்பிட வைத்து, சிறுநீர் நிரப்பப்பட்ட பாட்டிலில் அவர்களை சிறுநீர் குடிக்க வைத்த வீடியோ வெளியாகி அனைவரின் மனதையும் பதற வைத்துள்ளது. தாங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால், சரமாரியாக தாக்குதல் நடத்துவோம் என சிறுவர்களை அந்த கும்பல் மிரட்டுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.


சிறுவர்களுக்கு நேர்ந்த கொடூரம்:


பணத்தை திருடியதாக கூறி, சமூக விரோதிகள் சிலர் சிறுவர்களை பிடித்து கட்டி போட்டு சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான மற்றொரு வீடியோவில், சிறுவர்களை தரையில் தலைகுப்புற படுக்க வைத்து, கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டிப்போட்டு, டவுசரை கழற்றி, அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயைத் தேய்ப்பது பதிவாகியுள்ளது.


வலியால் அலறிக்கொண்டிருந்த சிறுவர்களுக்கு மஞ்சள் நிற திரவம் நிரப்பப்பட்ட ஊசி போடப்படுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, நேற்று முன்தினம் எடுக்கப்பட்டுள்ளது. சித்தார்த்நகர் மாவட்டத்தின் பத்ரா பஜார் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கோக்தி சௌராஹாவிற்கு அருகில் உள்ள அர்ஷன் சிக்கன் கடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


பரபரப்பை கிளப்பும் வீடியோ:


இந்த சம்பவம் குறித்து மாட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த்தா கூறுகையில், "இரண்டு சிறுவர்களுக்கு எதிரான ஆட்சேபனைக்குரிய செயல் வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதை அறிந்து, இந்திய சட்டத்தில் தகுந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்த கொடூரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.


சமீபத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமி ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேசத்தில் மனதை உலுக்கும் ஒரு சம்பவம் நடந்தது. 11 வயது சிறுமி கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.