USA On India: மணிப்பூர் மற்றும் ஜம்மு & காஷ்மீர் பகுதிகளில் வன்முறை போன்ற அச்சுறுத்தல் உள்ளதாக, அமெரிக்க அரசு தங்களது குடிமக்களை எச்சரித்துள்ளது.


அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை:


ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை, நக்சலைட்கள் நடமாடும் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று,  அமெரிக்க அரசு தனது நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, பயணிக்க பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா நிலை 2 இல் வைக்கப்பட்டுள்ளது, இது "அதிகரித்த எச்சரிக்கையை" குறிக்கிறது. அதேநேரம், இந்தியாவின் பல இடங்களை நிலை 4-ல் தரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான அறிக்கையில், "குற்றம் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். சில பகுதிகளில் ஆபத்து அதிகரித்துள்ளது," என்று அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது. 


காரணங்கள் என்ன?


அறிக்கையில், "பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை காரணமாக ஜம்மு & காஷ்மீருக்கு (கிழக்கு லடாக் பகுதி மற்றும் அதன் தலைநகரான லே தவிர) பயணம் செய்ய வேண்டாம். மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் பயங்கரவாதம் நிலவுவதாலும், மணிப்பூரில் நிலவும் வன்முறை மற்றும் குற்றச்செயல்கள் காரணமாகவும், இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட 10 கிமீ சுற்றளவிற்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தால் இருப்பதாலும்,  அந்த பகுதிகளுக்கும் பயணிக்க வேண்டாம் என்று, அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.


அதிகரித்த பாலியல் தொல்லை - அமெரிக்க அரசு


மேலும், "இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்று கற்பழிப்பு என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்கள் சுற்றுலாத் தளங்கள் மற்றும் பிற இடங்களில் நடந்துள்ளன. தீவிரவாதிகள் சிறிய அல்லது முன்னெச்சரிக்கை விடுக்காமல் தாக்கலாம். அவர்கள் சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள் / வணிக வளாகங்கள் மற்றும் அரசாங்க வசதிகளை குறிவைக்கின்றனர்” என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.


முடியவில்லையா மணிப்பூர் வன்முறை?


மணிப்பூரில் இரண்டு பழங்குடியின சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏராளமானோர் குடியிருப்புகளை இழந்து மாற்று இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடையே, மணிப்பூரில் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இதனிடையே, கடந்த மார்ச் மாதம் ஜார்கண்ட் வந்திருந்த பிரேசிலை சேர்ந்த பெண் சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை அரங்கேறிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபோன்ற நிகழ்வுகளை குறிப்பிட்டே, இந்தியா செல்லும் தங்கள் குடிமக்களுக்கு வன்முறை மற்றும் பாலியல் தொல்லை தொடர்பான, எச்சரிக்கைகளை அமெரிக்க அரசு விடுத்துள்ளது.