வரும் 2030ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளித் தொழில் 10 பில்லியன் டாலர் இலக்கை தாண்டும் என்ற நம்பிக்கை உள்ளது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.


'வளர்ச்சி அடைந்த இந்தியா – நீடித்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தொழில்நுட்ப ஜவுளிகள்' என்ற பெயரில் நடந்த சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இதனைத் தெரிவித்தார்.


தொழில்நுட்ப ஜவுளிகளின் முக்கியத்துவம்:


உலக அளவிலும், உள்நாட்டு அளவிலும் வாழ்க்கையின் அனைத்து இடங்களிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளின் நுகர்வு மற்றும் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  


தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் தொகுப்பையும் அவர் தொடங்கி வைத்ததுடன், என்டிடிஎம்-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 11 புதிய தொழில்களுக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழ்களையும் வழங்கினார்.


இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளித் தொழிலின் வளர்ச்சியில் அரசு முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம், எம்.எம்.எஃப் ஃபேப்ரிக், ஆடை மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.


156 ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல்:


என்டிடிஎம் இயக்கத்தின் கீழ் எடுக்கப்பட்ட முக்கிய முன்முயற்சிகளை எடுத்துரைத்த மத்திய அமைச்சர், கார்பன் இழைகளை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப ஜவுளித்துறையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் புத்தொழில்களுக்கு ஆதரவு உட்பட 156 ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த இலக்கை அடைவதில் மெடிடெக், குறிப்பாக சுகாதார தயாரிப்புகளின் திறனை அவர் வலியுறுத்தினார்.


விண்வெளி, ஆட்டோமொபைல் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரும் பயன்பாடுகளைக் கொண்ட உயர் செயல்திறன் இழைகளை உருவாக்குவதில் உள்ளூர் தொழில் துறையினர், அரசு மற்றும் பங்குதாரர்களின் திறனில் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


தனது உரையை நிறைவு செய்த மத்திய அமைச்சர், தொழில்நுட்ப ஜவுளித் துறையின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், உலகத் தலைவராகவும் மாறுவதற்கு அரசின் முழு ஆதரவையும் உறுதிபட தெரிவித்தார். தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் தொகுப்பையும் தொடங்கி வைத்த கிரிராஜ் சிங், என்டிடிஎம்-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 11 புதிய தொழில்களுக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழ்களையும் வழங்கினார்.


மாநாட்டின் தொடக்க அமர்வில், இஸ்ரோ தலைவரும் விண்வெளித் துறை செயலாளருமான டாக்டர் எஸ். சோமநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டின் முதல் நாளில், வேலைவாய்ப்பு, புத்தாக்கம், சமூக தாக்கம் மற்றும் தொழில்நுட்ப ஜவுளித் துறையின் எதிர்கால திசை குறித்த 4 குழு விவாதங்கள் இளடம்பெற்றன. குழு விவாதங்களில் அரசு பிரதிநிதிகள், தொழில்துறை தலைவர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் பங்கேற்றனர்.