Just In





Amit Shah TN Visit: பிரதமரை தொடர்ந்து தமிழ்நாடு வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா..
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நவம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளது, தமிழ்நாட்டு அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தரவுள்ளார்.
அமித்ஷாவின் வருகையானது, பிரதமர் மோடி வருகையின் அடுத்த நாளுக்கு வரவுள்ளதால் அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளது.
பிரதமர் வருகை:
மத்திய அரசு ரயில்வே துறையில் நவீனத்தையும், வேகத்தையும் இணைக்கும் விதத்தில் வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட்டது. இந்த ரயிலானது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. நாட்டின் 75 முக்கிய நகரங்களில் இந்த வந்தே பாரத் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் நான்கு வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த 4 ரயில்களும் வட மாநிலங்களில் மட்டுமே இயங்கி வந்தநிலையில், தென்னிந்தியாவில் இதுவரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படவில்லை என்ற குறை இருந்து வந்தது. தற்போது இந்த குறையை போக்கும்விதமாக சென்னை - மைசூர் இடையிலான வந்தேபாரத் ரயில் சேவையை வருகிற 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வருகை:
இதையடுத்து, திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் கலந்துகொள்ளும் மோடி, மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்ற இருக்கிறார்.
அமித்ஷா வருகை:
இந்நிலையில், அடுத்த நாளான நவம்பர் 12 ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தரவுள்ளார். அப்போது, வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து, உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில், ஏற்கனவே 10 தொகுதிகளை தேர்வு செய்து பாஜக தேர்தல் வியூகம் வகுத்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், அமித்ஷா வருகையானது தமிழ்நாட்டில் அரசியல் சூட்டை கிளப்பியுள்ளது.