மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6ஆம் தேதி அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என கூறப்படுகிறது.


நிலநடுக்கத்தில் சிக்கியதால் பல குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாக மாறியது. அதேபோல, நிலநடுக்கம் ஏற்பட்டு ஏழு நாள்களுக்கு பிறகும் பலர் காப்பாற்றப்பட்ட அதிசயங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.


மீட்கப்பட்ட 2 மாத குழந்தை:


அந்த வகையில், துருக்கியின் ஹடாய் என்ற இடத்தில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த இரண்டு மாத குழந்தை ஒன்று நேற்று மீட்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு 128 மணி நேரத்திற்கு பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


உறைந்து கிடக்கும் தட்பவெப்பநிலைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  


நிலநடுக்கம் ஏற்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டவர்களில் இரண்டு வயது சிறுமி, ஆறு மாத கர்ப்பிணி மற்றும் 70 வயதுப் பெண் ஒருவரும் அடங்குவர். இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் துயரத்தில் ஆழ்ந்தியிருந்தாலும், உதவி கிடைத்துவிடுமோ என நம்பிக்கையில் உள்ளனர்.


முதல் இரண்டு நாள்களில் ஏற்பட்ட ஐந்து நிலநடுக்கத்தால் இரண்டு நாடுகள் நிலைகுலைந்துள்ளது. குறிப்பாக, ரிக்டர் அளவில் 7.8, 7.5 என பதிவான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.


இதன் விளைவாகவே, தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தன. நிலநடுக்கம் காலை நேரம் ஏற்பட்டதால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. 


மீட்பு பணியில் இந்தியா:


மீட்கும் பணியில் துருக்கி மற்றும் சிரியாவை சேர்ந்த உள்நாட்டு மீட்பு படையினர் மட்டுமின்றி, இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். 


மோப்ப நாய்களின் உதவியுடனும், இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்கள், கடும் பனிப்பொழிவால் தங்க இடம் இன்றி தவித்து வருகின்றனர். 


கடந்த 2011ஆம் அண்டு ஜப்பானின் புகுஷிமா நகரில் நிகழ்ந்த அணு உலை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை காட்டிலும் அதிக உயிரிழப்பு, இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ளது. 


தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், ஆபரேஷன் தோஸ்த் மூலம் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தற்காலிக மருத்துவ முகாம்கள், மருந்துகள், மீட்பு படைகள் ஆகியவை அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


இந்தியாவுடன் துருக்கி நல்லுறவை பேணவில்லை என்றாலும் அந்நாட்டுக்கு சரியான நேரத்தில் உதவிகளை செய்துள்ளது இந்தியா.