பாரதிய ஜனதா கட்சி அன்னா ஹசாரேவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக தலைநகர் டெல்லியின் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி அரசின் மதுக்கொள்கையில் ஊழல் இருப்பதாக பாரதிய ஜனதா குற்றம்சாட்டியதற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர் , “முதலில் அவர் மதுக்கொள்கையில் ஊழல் இருப்பதாகச் சொன்னார்கள். பிறகு சிபிஐ விசாரணையில் இல்லை என மறுத்தது. பொதுமக்கள் அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. அரசியல் இதெல்லாம் சாதாரணம். இதைச் சொன்னவர்கள் எப்படி எம்.எல்.ஏக்களை 20 கோடிக்கு விலை பேசினார்கள் என்பதை சிபிஐ விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். 




டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. 2020ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தது. அதைத் தொடர்ந்து டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியேற்றார்.  ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை பாஜக தன் பக்கம் இழுத்து வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 






இந்நிலையில் இன்று டெல்லி சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தீர்மானம் ஒன்றை கொண்டுவர உள்ளார். அந்த தீர்மானத்தின் மூலம் தன்னுடைய அரசிற்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்க உள்ளார்.


இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,”எங்களுடைய எம்.எல்.ஏக்கள் சிலரை வாங்க உள்ளதாக பாஜக புகார் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக பலரும் என்னை தொடர்பு கொண்டு கேட்டு வருகின்றனர். இதனால் டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தை நான் கொண்டு வர உள்ளேன். அதன்மூலம் அனைவரும் எங்கள் பக்கம் தான் உள்ளனர் என்பதை நிரூபிக்க உள்ளேன். மேலும் பாஜகவின்  ‘ஆப்ரேஷன் லோட்டஸ்’ என்பது இங்கு பழிக்கவில்லை என்பதை அனைவருக்குக் தெரிவிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 


டெல்லியிலுள்ள 40 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை பாஜகவினர் சுமார் தலா 20 கோடி ரூபாய் அளித்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் குற்றச்சாட்டப்பட்டது. எனினும் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்து வருகிறது. டெல்லியில் பாஜக தற்போது நடைபெற்று வரும் சிபிஐ ரெய்டு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்து வருகிறது. டெல்லி சட்டப்பேரவையில் பாஜக தற்போது 8 எம்.எல்.ஏக்களை வைத்துள்ளது. பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்க இன்னும் 28 எம்.எல்.ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.