பிரபல ஐடி நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(TCS), 2026 மார்ச் மாதத்திற்குள், படிப்படியாக 12,000 ஊழியர்களை நீக்க உள்ளதாக கடந்த ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது. இதனால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், ஐடி ஊழியர்கள் சங்கங்களின் அமைப்பான NITES, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

NITES அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என்ன.?

ஐடி ஊழியர்கள் சங்க அமைப்பான NITES, மத்திய அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், டிசிஎஸ் அறிவித்துள்ள பணிநீக்கங்களின் சட்டப்பூர்வமான தன்மையை சாவல் செய்துள்ளது.

மேலும், அனைத்து பணி நீக்கங்களையும் நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு, டிசிஎஸ் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

அதோடு, டிசிஎஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தை, முறையான நடைமுறைகள் அல்லது பொறுப்புக்கூறல் இல்லாமல், பெரிய அளவிலான பணிநீக்கங்களை செய்ய அனுமதிப்பது, மற்ற நிறுவனங்களுக்கு தவறான உதாரணமாகிவிடும் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இது, வேலைவாய்ப்பு நிச்சயமற்ற தன்மை, தொழிலாளர் பாதுகாப்பு குறைதல் மற்றும் இந்தியாவின் தொழிலாளர் சூழலில் நம்பிக்கை குறைவதற்கும் வழிவகுக்கும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பரவலான வேலை இழப்புகளின்போது, தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பள உயர்த்தப்படும் நிலையில், நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகிக்கும் அவரையே இந்த நடவடிக்கைக்கு பொறுப்பாக்க வேண்டும் எனவும் NITES கேட்டுக்கொண்டுள்ளது.

கூடுதலாக, டிசிஎஸ் நிறுவனத்தின் தாமதமான ஆன்போர்டிங்(ஆட்சேர்ப்பு) நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், 600 நிபுணர்களின் ஆட்சேர்ப்பு தாமதம் தொடர்பான கவலைகளை தொழிற்சங்கம் எடுத்துரைத்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்திற்கு மற்ற வர்த்தக சங்கங்களும் கண்டனம்

டிசிஎஸ் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு, இந்தியாவின் பல்வேறு ஐடி ஊழியர்கள் சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் ராஜினாமா அழுத்தத்தை எதிர்க்க, ஊழியர்கள் பணிநீக்கத்தை சந்திக்க வேண்டியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பணிநீக்க அறிவிப்பை திரும்பப்பெற்று, பாதிக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளுமாறு கர்நாடக மாநில ஐடி ஊழியர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேபோல், ஊழியர்களை ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுப்பதை டிசிஎஸ் தவிர்க்குமாறு ஐடி ஊழியர்கள் மன்றம் (FITE) கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கு மாறாக, நோட்டீஸ் கால ஊதியம் வழங்குமாறும், பணிநீக்கத்திற்கு ஈடாக ஒரு தொகையை வழங்கி, உடல்நலனுக்கான காப்பீட்டை ஒரு வருட காலத்திற்கு நீட்டித்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆட்குறைப்பு குறித்து டிசிஎஸ் அறிவித்தது என்ன.?

டிசிஎஸ் நிறுவனம் உலகின் பல நாடுகளில் தனது கிளைகளை கொண்டு, பல நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், தற்போது ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவைகளை வழங்கி வருகிறது. 2025 நிலவரப்படி, டிசிஎஸ்-ல் 6 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த சூழலில், டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 12,000 ஊழியர்களை, வரும் ஆண்டில், அதாவது 2026 மார்ச் மாதத்திற்குள் படிப்படியாக பணிநீக்கம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அதன் பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது, நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 2 சதவீதமாகும்.