ஒரே நாளில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 


ஆர்.எஸ்.எஸ் பேரணி


கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 50 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் இதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை  விசாரித்த தனி நீதிபதி அமர்வு கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இதர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. 


இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதனை கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து மத நம்பிக்கைகளையும் பாதுகாத்து தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ வேண்டும் என்பது அரசின் நோக்கமாக உள்ளதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். 


அதனடிப்படையில் முன்னெச்சரிக்கையாக உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையி்ல் தமிழ்நாடு அரசு செயல்படுவதாகவும், போராட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஊர்வலம் செல்ல எந்தவித அனுமதியும் யாருக்கும் வழங்கவில்லை என கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் எனவும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டனர். அதேசமயம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ் பேரணியை அனுமதிக்க காவல்துறைக்கும் உத்தரவிட்டப்பட்டது.


உச்சநீதிமன்றம் சென்ற தமிழ்நாடு அரசு 


இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி தராததற்கு சட்டம், ஒழுங்கு பிரச்சினை தவிர வேறு எதுவும் இல்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில் பொதுப்பாதுகாப்பு பாதிப்பு எனில் உரிய கட்டுப்பாடு விதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.  அதேசமயம் ஒரே நாளில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி தர முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக 5 இடங்களில் அனுமதி தர முடியும் எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். 


மேலும் படிக்க : TMC for Rahul Gandhi: எதிர்க்கட்சிகளை இணைக்கும் ராகுல் விவகாரம்.. காங்கிரஸுடன் கை கோர்த்த திரிணாமுல் காங்கிரஸ்.. மத்திய அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!