Tamil Nadu Corona LIVE: கர்நாடகாவில் 9 ஆயிரத்து 808 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 08 Jun 2021 09:16 PM
கர்நாடகாவில் 9 ஆயிரத்து 808 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9 ஆயிரத்து 808 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 லட்சத்து 17 ஆயிரத்து 289 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் கர்நாடகாவில் 179 நபர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை கர்நாடகாவில் 32 ஆயிரத்து 99 நபர்கள் கொரோனாவிற்கு இதுவரை பலியாகி உள்ளனர்.  

18ஆவது நாளாக கொரோனா தொற்று குறைவு

தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா தொற்றானது குறைந்து வருகிறது. மாநில அளவில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 112 பேருக்கு இன்று கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 18ஆயிரத்து 23 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 31ஆயிரத்து 45 பேர் இன்று குணமடைந்தனர். சிகிச்சை பலனின்றி 409 பேர் உயிரிழந்தனர்

மத்திய அரசு 44 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உத்தரவு

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில் நாட்டில் 18 வயதை கடந்த அனைவருக்கும் வரும் ஜூன் 21-ந் தேதி முதல் மத்திய அரசே இலவசமாக கொரோனா தடுப்பூசியை செலுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். இதையடுத்து, மாநிலங்களுக்கு வழங்குவதற்காக 25 கோடி கோவிஷீல்டு மற்றும் 19 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி சென்னை வந்தது

கொரோனா வைரசில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், இன்று ஹைதராபாத்தில் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசிகள் தனியார் விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளது.

கர்நாடகாவில் கொரோனா வைரசுக்கு 9 மருத்துவர்கள் மட்டுமே உயிரிழப்பு

நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்கத்திற்கு பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட சுகாதாரப் பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 624 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் கர்நாடகாவில் 9 மருத்துவர்கள் மட்டுமே கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளதாகவும், முன்களப் பணியாளர்களை காக்க கர்நாடக அரசு எடுத்த நடவடிக்கைகளே காரணம் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கு க

தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செயல்படும் நபர்கள் மீது காவல்துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு 8.1 சதவீதமாக குறைவு - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மேற்கு மண்டலங்ளில் திருப்பூர் மாவட்டமும் ஒன்றாகும். அங்கு ஆய்வு மேற்கொண்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திருப்பூர் மாநகராட்சியில் கொரோனாவால் 13 ஆயிரத்து 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 ஆயிரத்து 131  பேர் குணம் அடைந்துள்ள நிலையில் 356 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து 8.1 சதவீதமாக குறைந்துள்ளது என்றார். 

புதுச்சேரியில் மேலும் 545 பேருக்கு கொரோனா

புதுச்சேரி மாநிலத்தி மேலும் 545 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1.10 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 6 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,644 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை தடுப்பூசி வருகை

மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழ்


கோவிஷூல்டு - 73,63,150 டோஸ்
கோவாக்ஸின்  - 14,90,540  டோஸ்
மொத்தம்            - 88,53,690  டோஸ்


18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தமிழக அரசின் நேரடிக் கொள்முதல் கீழ்


கோவிஷூல்டு - 11,18,530 டோஸ்
கோவாக்ஸின்  -   1,91,740  டோஸ்
மொத்தம்            -  13,10,270 டோஸ்


இரண்டு ஒதுக்கீட்டும் சேர்த்து : 1,01,63,960 டோஸ்


தடுப்பூசி போடபட்டவை : 97,35,420


கையிருப்பு  : 3,000  டோஸ் கீழ்

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி போடும் பணி பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம், நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்காலிகமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்.  குறைந்த அளவு இருப்பதால் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தேனியில் மேலும் 117 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 39,399 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலியானதால் இறப்பு எண்ணிக்கை 403ஆக அதிகரித்துள்ளது.

ஒருநாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கு கீழ் பதிவானது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 1.14 லட்சம், நேற்று ஒரு லட்சமாக இருந்த பாதிப்பு இன்று ஒரு லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. 


இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரேநாளில் 86,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 9 ஆயிரத்து 975இல் இருந்து 2 கோடியே 89 லட்சத்து 96 ஆயிரத்து 473-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 ஆயிரத்து 123 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரத்து 186-ல் இருந்து 3 லட்சத்து 51 ஆயிரத்து 309-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 282 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 180இல் இருந்து 2 கோடியே 73 லட்சத்து 41 ஆயிரத்து 462 ஆக அதிகரித்துள்ளது. 


கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.94 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.21 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 லட்சத்து 3 ஆயிரத்து 702-ஆக குறைந்துள்ளது.  இதுவரை 23  கோடியே 61 லட்சத்து 98 ஆயிரத்து 726 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று முதல் மதுபான கடைகள் திறப்பு

புதுச்சேரியில் 42 நாட்களுக்கு பிறகு கடற்கரைகள், வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி.  காய்கறி, மளிகை உட்பட அனைத்து கடைகளும் மாலை  5 மணி வரை திறக்க அனுமதி.  மேலும், புதுச்சேரியில் இன்று முதல் மதுபான கடைகளும் திறக்கப்படுகின்றன.

28 யானைகளுக்கு இன்று கொரோனா பரிசோதனை

நீலகிரி முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் உள்ள 28 யானைகளுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. யானைகளிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

உலகளவில் 17.43 கோடி பேருக்கு கொரோனா

உலகில் 17.43 கோடி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 37.51 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 15.76 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 12,153 பேருக்கு கொரோனா உறுதி; ஒரேநாளில் 309 பேர் தொற்றால் உயிரிழந்தனர். பிரேசிலில் ஒரேநாளில் 38,750 பேர் பாதிப்பு; 2,115 பேர் பலி; மொத்த மாதிப்பு 1.69 கோடி; மொத்த பலி 4.74 லட்சம்

Background

தமிழ்நாட்டில் படிப்படியாகக் குறைந்துவரும் கொரோனா தொற்றின் அளவானது, நேற்று 19ஆயிரத்து 448-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய சில நாள்களைப் போலவே, குணமானவர்களின் எண்ணிக்கை தொற்றுப்பதிவைவிட அதிகமாகவே இருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று 31ஆயிரத்து 360 பேர் குணமாகியுள்ளனர். சிகிச்சையில் இருந்தவர்களில் 351 பேர் உயிரிழந்தனர். தற்போது, மாநில அளவில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றியதால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தலிலும் மருத்துவமனை சிகிச்சையிலும் இருக்கின்றனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.