Tamil Nadu Coronavirus LIVE: தடுப்பூசி பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக - தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE

Background
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் 37 ஆயிரத்து 154 பேர் கொரோனாவால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 8 லட்சத்து 74 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 899 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 724 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 8 ஆயிரத்து 764 ஆக பதிவாகியுள்ளது. நாட்டில் இதுவரை 37.73 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
தடுப்பூசி பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக - தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தடுப்பூசி பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்
கொரோனா முதல் அலை பரவலின்போது ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாகவே கொரோனா பாதிப்பு குறைந்தது.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ரஷியா நிறுவனம் தயாரித்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை சில தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கட்டணம் அடிப்படையில் பொதுமக்களுக்கு போட்டு வருகின்றன.
தடுப்பூசியை பொறுத்தவரை முதலில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட்டது. அதன்பிறகு 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும், பிறகு 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் போடப்பட்டது.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் அடுத்த மாதம் இறுதியில் இருந்து கொரோனா 3-வது அலை பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள். ஆனால் தடுப்பூசி திட்டத்தை பொறுத்தவரை நாடு மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இந்தியாவில் இதுவரை 36 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது பொதுமக்கள் மத்தியில் கொரோனா 3-வது அலை அச்சம் எழுந்துள்ளது. எனவே கொரோனா 3-வது அலையை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசை மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்கவும், அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையிலும் 65.5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.