Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் இன்று 1891 பேருக்கு கொரோனா பாதிப்பு - 21 மாவட்டங்களில் பலி இல்லை

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 21 Jul 2021 08:36 PM

Background

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் முதல் குறைந்து வருகிறது. 2-வது அலையின் வேகம் மே மாதம் உச்சத்தில் இருந்தது. அந்த மாதம் முழுவதுமே தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வந்தது. இதனைத் தொடர்ந்து போடப்பட்ட ஊரடங்கால் நோயின்...More

தமிழ்நாட்டில் இன்று 1891 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 891  நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,41,248 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,891 ஆக உள்ளது.


இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து  41 ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்து 623 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 138 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 138  ஆக உள்ளது. 


கோவை 183, ஈரோடு 141, தஞ்சை 90, சேலம் 119, திருப்பூர் 97, செங்கல்பட்டு 102, கடலூர் 79, திருச்சி 71, திருவண்ணாமலை 65, திருவள்ளூர் 69, நாமக்கல் 59, கள்ளக்குறிச்சி 44, காஞ்சிபுரம் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 


கொரோனாவால் மேலும் 27 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,809 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 17 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 10 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 3 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 2 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8304 பேர் உயிரிழந்துள்ளனர்.


அதிகபட்சமாக சேலத்தில் 4 பேரும், ஈரோரு, திருச்சியில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர். 21 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 26,158 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,423 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,81,201 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


12 வயதிற்குட்பட்ட 110 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 39,695 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25,786 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 7581 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.